வியாழன், 7 ஜூலை, 2011

அறிவுரை

பெற்றோர்களின் கவனத்திற்கு.....




மனவியலில் Superego Lacunae என்ற சொல் இருக்கிறது. இதற்கு தமிழில் அப்படியே பொருள் கூற முடிவது சுலபமல்ல என்றாலும் பொதுவாக ‘மனசாட்சியின் ஓட்டைகள்’ என்பதாகப் பொருள் கூறலாம். தங்கள் பிள்ளைகளின் தவறுகளையும், தவறான நடத்தைகளையும் கண்டும் காணாதது போல் இருக்கும் பெற்றோர்களின் நடவடிக்கையைச் சுட்டிக் காட்டுவதற்காக இச்சொல் அதிகம் மனோதத்துவ நிபுணர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இன்றைய பெற்றோர்களுக்கு ஏராளமான வேலைகள் இருக்கின்றன. ஒரு நாளுக்கு 24 மணி நேரம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. வீட்டுச் செலவை சமாளிக்க பெரும்பாலும் இரண்டு பேருமே வேலைக்குப் போக வேண்டியதாகக் கூட இருக்கிறது. இப்படி நேரம் போதாத அவசர வாழ்க்கையில் குழந்தைகளை அதிகம் கவனிக்க அவர்களால் முடிவதில்லை. அதனாலேயே அவர்கள் குழந்தைகளைக் கவனிக்கத் தவறுபவர்களாக இருக்கலாம். அதனை superego Lacunae வகையில் சேர்க்க முடியாது. ஆனால் அந்தக் கவனக்குறைவுகளுக்கு அவர்கள் தரும் விலை மிக அதிகம். உதாரணத்திற்கு இரண்டு உண்மை சம்பவங்களைப் பார்க்கலாம்.

ஒரு வீட்டில் தங்கள் ஒரே மகனுக்கு ‘பாக்கெட் மணி’ என்ற பெயரில் நிறைய பணம் தரும் பழக்கம் இருந்தது. அவன் கல்லூரிக்குச் சென்றதும் அளவுக்கும் அதிகமாகவே பெற்றோரிடம் பணத்தைக் கேட்டுப் பெற ஆரம்பித்தான். அந்தப் பணம் எப்படி செலவாகிறது என்பதை அறிய பெற்றோரில் ஒருவராவது மெனக்கெட்டிருந்தால் மகன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக ஆரம்பித்திருக்கிறான் என்பது சுலபமாகப் புரிந்திருக்கும். வேறு சில சின்னச் சின்ன வித்தியாசங்களும் அவன் நடவடிக்கைகளில் தெரிய ஆரம்பித்திருந்தன. பெற்றோர் அதைக் கவனித்தாலும் ’வயதுக் கோளாறு’ என்று அலட்சியமாக இருந்து விட்டனர். முடிவில் எல்லாம் கைவிட்டுப் போன பிறகு தான் ஒரு நாள் அவர்கள் அறிய நேர்ந்தது. இன்று அந்த இளைஞன் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறான். பெற்றோர் அவன் குணமாகி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டாத தெய்வமில்லை.

இன்னொரு குடும்பத்தில் ஒரு கல்லூரியில் படிக்கும் பெண் தனக்கு எந்த விதத்திலும் தகுதியில்லாத கீழ்த்தரமான ஒரு இளைஞனைக் காதலிக்க ஆரம்பித்திருந்தாள். கல்லூரியில் இருந்து வரும் வழக்கமான நேரத்திலிருந்து மிக காலந்தாழ்ந்து வருதல், வீட்டில் இருக்கும் சமயங்களிலும் எப்போதும் செல்போனில் மணிக்கணக்கில் பேசுதல், பெற்றோர் அருகில் வரும் போது குரலைத் தாழ்த்துதல் அல்லது செயற்கைத் தனமாக எதாவது பேசுதல் போன்ற நிகழ்வுகள் அந்த வீட்டில் நடக்க ஆரம்பித்தன. அந்த இளைஞனுடன் சுற்றுவதில் அவள் பரிட்சைக்குக் கூட செல்லவில்லை. போனில் அவள் தோழியுடன் பேசுகிறாள் என்று எண்ணி ‘இந்த காலத்தில் செல்ஃபோனில் நேரம் காலம் தெரியாமல் பேசுவதே வாடிக்கையாகப் போகி விட்டது’ என்று பெற்றோர் பொதுப்படையாக நினைத்து விட்டு விட்டனர். வர வேண்டிய நேரத்திற்கு வராமல் கால தாமதமாக வந்ததற்கு மகள் சொன்ன சாக்கு போக்குகளில் திருப்தி அடைந்து விட்டனர். அவர்கள் அலட்சியப்படுத்தாமல் கவனித்து காரணத்தைத் தேடி இருந்தால் கண்டிப்பாக உண்மை நிலவரம் தெரிந்திருக்கும். கடைசியில் ஒரு நாள் மாலையும் கழுத்துமாக வந்த பின் தான் அவர்கள் உண்மையை உணர்ந்தனர். காதல் திருமணத்தில் தப்பில்லை. ஆனால் ஆறே மாதத்தில் கணவனின் உண்மைக் குணங்கள் அறிந்து சகிக்க முடியாமல் மகள் தாய் வீட்டுக்குத் திரும்பி வந்த போது அவர்கள் துக்கம் சொல்லி மாளாது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் பெற்றோர் மாறுதல்களைக் காண ஆரம்பித்த போதே விழித்துக் கொண்டிருந்தால் இரண்டு பேருடைய வாழ்க்கையையும் மேலும் சீரழியாமல் திசை திருப்பி இருக்கலாம். இதில் அவர்கள் வேண்டுமென்றே கண்டும் காணாதிருந்தார்கள் என்று கூற முடியாது. போதிய கவனம் தராமல் இருந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

இனி superego Lacunae என்ற மனோதத்துவ கலைச் சொல்லிற்குப் பொருத்தமான வேறு இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.

அந்த வீட்டில் பெற்றோருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். ஒரே மகன் என்பதற்காக மகனைப் பெற்றோர் மிகச் செல்லமாக வளர்த்தனர். அவன் என்ன குறும்பு செய்தாலும் அவர்கள் அவனைத் திட்ட மாட்டார்கள். அவன் சகோதரிகளுடன் சண்டை போட்டு அவர்கள் அவனை அடித்து விட்டால் அந்தப் பெண்களுக்குத் தான் தண்டனை. பக்கத்து ஓட்டலில் அந்த மகனுக்குத் தனியாக ஒரு கணக்கு ஏற்படுத்தி அவன் எப்போது என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ள வசதி ஏற்படுத்தித் தந்தனர். அந்த சிறுமிகள் வீட்டில் பழைய சோறு சாப்பிடும் போது அந்த சிறுவன் அந்த ஓட்டலுக்குச் சென்று சுடச் சுட பிடித்ததைச் சாப்பிடுவான். சில சமயம் அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து வந்து சகோதரிகளுக்கு முன்பே அவர்களுக்குத் தராமல் அவன் அதை சாப்பிடுவதும் உண்டு. அந்த சிறுவன் வளர்ந்து பெரியவனான பின் சிறிதும் பொறுப்பில்லாமல் குடிகாரனாக மாறி அந்தப் பெற்றோர் சேர்த்து வைத்திருந்த சொத்தை எல்லாம் அழித்து உருப்படாமல் போனான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இன்னொரு குடும்பத்தில் தங்கள் ஒரே மகன் மீது அவனது பெற்றோருக்கு அளவு கடந்த பாசம் இருந்தது. அவன் மிக நன்றாகப் படித்து வகுப்பில் முதல் மாணவனாகவே என்றும் இருந்ததால் அவனைக் குறித்து அவர்களுக்கு அளவு கடந்த பெருமிதம். படிப்பில் சுட்டியாக இருந்த அவனிடம் சிறு வயதிலேயே தலைக்கனம் அதிகம் இருந்தது. அவன் தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களை எல்லாம் எடுத்தெறிந்து பேசுவான். அக்கம் பக்கத்தில் உள்ளோரிடமும் அப்படியே நடந்து கொண்டான். அப்போதெல்லாம் அந்தப் பெற்றோர் அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். யாராவது அந்தப் பெற்றோரிடம் அவன் நடத்தை குறித்து அதிருப்தி தெரிவித்தால் “நீங்கள் ஏன் அவனிடம் வம்புக்குப் போகிறீர்கள்?” என்று அவர்களிடமே திருப்பிக் கேட்பார்கள். பெரியவனான பிறகு அவன் பெற்றோரிடம் கூட அப்படியே நடந்து கொள்ள ஆரம்பித்தான். பெர்றோரின் வயதான காலத்தில் “பணம் ஏதாவது தேவைப்பட்டால் கேளுங்கள். கூடவே இருந்து என் உயிரை வாங்காதீர்கள்” என்று சொல்லி பெற்றோரை கூட வைத்துக் கொள்ள மறுத்து விட்டான்.

இந்த இரண்டு குடும்பத்திலும் அவர்கள் தங்கள் மகன்களின் குணாதிசயங்கள் தவறாகப் போகும் போதெல்லாம் கண்டும் காணாமல் இருந்தார்கள். வளரும் காலத்தில் கண்டு கொள்ளப்படாத தவறுகளை வளர்ந்த பின்னர் திருத்துவது சுலபமல்ல. எதையெல்லாம் குழந்தைகளிடத்தில் விதைக்கிறோமோ அதையெல்லாம் வயதான காலத்தில் அறுவடை செய்ய வேண்டி வரும் என்பதை பெற்றோர்கள் மறந்து விடக்கூடாது. களைகள் காணப்பட்டால் சிறு வயதிலேயே பிடுங்கி எறிவது தான் முறை. அது தான் சுலபம். கண்டும் காணாமலும் போனால் அறுவடைக் காலம் அழ வேண்டிய காலமாக மாறி விடும் என்பது உறுதி.

முதல் இரண்டு உதாரணங்களில் பெற்றோர் போதுமான கவனம் செலுத்தாமல் விட்டு விட்டனர். கடைசி இரண்டு உதாரணங்களில் பிள்ளைகள் செய்வதெல்லாம் அழகு என்று பெற்றோர் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தொட்டால் தீயின் குணம் சுடுவது தான்.

எனவே பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் வளரும் போது நற்குணங்களுடன் வளர்கின்றனரா, புத்திசாலித்தனமாக வளர்கின்றனரா என்பதை கண்காணிக்க மறந்து விடாதீர்கள். சிறு சிறு தவறுகள் கண்டால் அவ்வப்போது திருத்துங்கள். அப்போது சின்னவர்கள் தானே என்று சகித்துக் கொள்ள நினைக்காதீர்கள். சிறு வயதில் அவர்களுடைய பண்புகள் நல்லதாக இருந்து ஆழப்பட்டால் மட்டுமே அவர்கள் வளர்ந்த பின்னால் உங்களுக்குப் பெருமை சேர்க்கிற விதத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த மதிப்பீடுகளை அவர்களுடைய சிறு வயதில் சொல்லித் தருகிறீர்களோ அந்த மதிப்பீடுகளின் படியே அவர்கள் மற்றவர்களிடம் மட்டுமல்ல உங்களிடமும் நடந்து கொள்வார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்குமானால் அந்த மதிப்பீடுகளின் தரம் உயர்ந்ததாக இருக்கும்படியே நீங்கள் கண்டிப்பாக பார்த்துக் கொள்வீர்கள்.

வெள்ளி, 1 ஜூலை, 2011

சனி, 18 ஜூன், 2011

புற்றுநோயை விரட்டும் காபி


எனக்குச் சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. காபி இல்லாமல் இருக்க முடியாது என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவரா நீங்கள்? நீங்கள் பெருமைப்படுவதற்கு கூடுதலாக இன்னொரு விஷயம் இப்போது கிடைத்துவிட்டது. காபி குடிப்பது மார்பகப் புற்றுநோய் வருவதைக் குறைத்துவிடுகிறதாம். ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரே வயதிலுள்ள பெண்களை வைத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இது தெரிய வந்திருக்கிறது. காபி குடித்த பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவும், காபி அருந்தாத பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் அதிகம் இருப்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள் அவர்கள். ஆனால் காபி குடிப்பது, எந்தவிதத்தில் பெண்களின் உடலில் செயல்பட்டு புற்றுநோய் வருவதைக் குறைக்கிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. நீங்கள் காபி பிரியரா? இனிமேல் காலையில் எழுந்ததும் கண்களைத் திறக்காமலேயே காபியை ரசித்து அருந்தலாம்!

புதன், 25 மே, 2011

அழுகை

கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது

உலகம் முழுவதும் பெண்களுக்கு தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஆம். பெண்கள் அழுவதற்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது ஆண்களே.

லண்டனில் கண் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் சார்பில் 2,000 ஆண், பெண்களிடம் (அழுகை வரும் அளவுக்கு) ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தங்களை அழ விடுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக 4ல் 1 பெண் தெரிவித்தார். அதிலும், ஒருவர்கூட தனது அப்பா, மகனை காரணமாக கூறவில்லை! ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களின் ஏகோபித்த குற்றச்சாட்டு… கணவன் அல்லது காதலன் மீதுதான். மனைவியோ, காதலியோ… அழ விட்டுப் பார்ப்பதில் ஆணுக்கு தனி ஆர்வம் இருப்பதாக வெடித்தனர் பெண்கள்.

ஆய்வின்படி, மனைவி, காதலி மட்டுமின்றி தாயைக் கூட அழவிடும் ஆண்கள் 63 சதவீதம் என்று தெரிய வந்தது. இப்படிச் செய்யும் ஆண்கள் தப்பி விட முடியுமா என்ன…? அவர்கள் ஆபீசில் பாஸ் கடிக்கும்போதும், வேலையைச் சுமத்தும்போதும் அழுகின்றனராம். இங்கிலாந்து பெண்களில் 32 சதவீதத்தினரும், ஆண்கள் 22 சதவீதத்தினரும் வேலையில் மனஅழுத்தம், பிரச்னையால் கண்ணீர் விட்டுக் கதறுகின்றனர்.

கடந்த 6 மாதங்களில் ஒருமுறையாவது அழுததாக ஆய்வில் பங்கேற்ற பலர் தெரிவித்தனர். எனினும், அலுவலக பிரச்னைகள், டென்ஷனால் கண்ணீர் விட்டு அழும் ஆண்கள் குறைவே. மற்றபடி மனதுக்குள் அழுதாலும், பெண்களால் என்ன பிரச்னை வந்தாலும் மனதுக்குள் கூட அழுவதில்லை. ஸ்டிராங்காக எதிர்கொள்கின்றனர். மாறாக, பெண்களை டென்ஷனாக்கி அழ விடுகின்றனர் என்கிறார் ஆய்வு நடத்திய டாக்டர் சாரா ப்ரூவர்.

அழுவது சோகமானதுதான் என்றாலும், கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது என்கிறார் அவர்.நவீன உலகில் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன் கழிக்கிறோம். அதனால், கண்கள் காய்ந்து ஈரத்தன்மையை இழக்கின்றன. கண்ணீர் வெளியானால் கண்கள் சுத்தமாகும் என்றார் சாரா.

சாரே… பொஞ்சாதி, கேர்ள் பிரண்ட அழ விடுறதே அவங்க கண்கள் நல்லா இருக்கணுங்கற நல்ல நோக்கத்துலதான்னு அவங்க புரிஞ்சிக்கணும் தானே சாரே… என்கிறார் தினமும் மனைவியை அழ விடும் ஒரு கணவர்

சனி, 14 மே, 2011

பணத்திற்கு பட்டை நாமம் போட்ட வாக்காளர்கள்

election 2011  பணத்துக்கு பட்டை நாமம் போட்ட வாக்காளர்கள்
A+ A-
தேர்தல் கமிஷனின் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளையும் மீறி, தமிழகத்தில் பண பட்டுவாடா நடந்தாலும், அதையும் வாங்கி, பணத்துக்கு, "பட்டை நாமம்' போட்டுவிட்டு, தாங்கள் நினைத்தவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போட்டு, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் என்றால், கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி இறைப்பது வாடிக்கையாகி விட்டது. ஜனநாயகத்தை, பணநாயகத்தால் வெல்ல முடியும் என்பது, திருமங்கலம் இடைத்தேர்தலின் போது, தி.மு.க.,வால், உறுதிபடுத்தப்பட்டது. அந்த தேர்தலில், தி.மு.க., கோடி கோடியாக பணத்தைக் கொட்டியது. இதற்கு நல்ல பலன் கிடைத்ததால், அதைத் தொடர்ந்து நடந்த, மதுரை மேற்கு, மதுரை மத்திய தொகுதிகளில், இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது. அதன் மூலம், தி.மு.க., அடுத்தடுத்து வெற்றிகளையும் ஈட்டியது.சட்டசபை தேர்தலிலும், இந்த நடைமுறையை பின்பற்ற முயற்சிகள் நடந்தன. ஆனால், தேர்தல் கமிஷன் இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. எப்போதும் இல்லாத வகையில், தேர்தல் செலவு கணக்குகளை பார்வையிட, மத்திய கலால் துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளின் கீழ் பறக்கும் படை, வீடியோ குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழு, சுற்றிச் சுற்றி வந்ததன் மூலம், பண பட்டுவாடா ஓரளவு கட்டுக்குள் வந்தது.

இந்த கிடுக்கிப்பிடிகளை எல்லாம் மீறி, தமிழகம் முழுவதும், பல வழிகளில், தி.மு.க., தாராளமாக பணத்தை செலவு செய்தது. ஒரு தொகுதிக்கு, கட்சி சார்பில் மூன்று கோடி ரூபாயும், வேட்பாளர்கள் சார்பில் பல கோடி ரூபாய் என, பட்டுவாடாவும் நடந்தது."அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தையா தருகின்றனர்... நம்மிடமிருந்து எடுத்த பணத்தைத் தானே திருப்பித் தருகின்றனர்...' என்ற எண்ணத்தை, பல அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் மக்கள் மனதில் விதைத்ததால், வேட்பாளர் கொடுத்த பணத்தை மறுக்காமல் வாங்கிக் கொண்ட மக்கள், பணத்துக்கு, "பட்டை நாமம்' போட்டுவிட்டு, தங்களின் விருப்பப்படியே ஓட்டுப் போட்டதன் மூலம், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஜனநாயகத்தை பணநாயகத்தால் ஜெயிக்க முடியும் என்ற எண்ணம், இந்த தேர்தல் மூலம் தவிடுபொடியாக்கப் பட்டுள்ளது.

திங்கள், 18 ஏப்ரல், 2011

காத்திருக்கும் கடமைகள்

ஓருவழியாகத் தேர்தல் திருவிழா ஓய்ந்துவிட்டது. பலருக்குக் கிலியும், சிலருக்கு வலியும் இத்தேர்தல் ஏற்படுத்தியது என்றால் அதில் வியப்பில்லை. எனவே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பது மட்டுமே அடுத்த கட்ட எதிர்பார்ப்பு. இதுவரை எப்படி நடந்ததோ அது இம்முறை மாறிவிட்டது என கூறும் அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இருந்தது. நினைத்ததை முழுவதுமாக சாதிக்கமுடியாவிட்டாலும், இனி வரும் தேர்தலில் இந்த பயம் நிச்சயம் இருக்கும். அதுவரை ஜனநாயகத்துக்கு வெற்றி என்றே கருதலாம்.அதைச் செய்வேன், இதைச் செய்வேன் எனக் கூறியவர்கள் அதிகாரத்துக்கு வந்ததும் முதலில் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும் என்பதுதான் அடுத்தகேள்வி. இப்போதைய எதிர்பார்ப்பு புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அரசு பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்குக் காத்திருக்கும் கடமைகள் ஏராளம்.ஏழைகளின் பிரச்னைகளை முதலில் தீர்க்க வேண்டும். மாறாக தனிமனித வெறுப்புகள், பழிவாங்கல்கள் இருக்கக் கூடாது.கடந்தமுறை செயல்படுத்தாமல் நிறுத்தப்பட்டவை அல்லது புதிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதவிர, மக்கள் எதிர்பார்க்கும் பல்வேறு பிரச்னைகளை புதிய அரசு தீர்க்க வேண்டியது மிக அவசியம்.இப்போதைய தலையாய பிரச்னையாக இருப்பது மின்வெட்டு. இதைத் தவிர்ப்பதற்கு உடனடியாகச் செய்ய வேண்டியவை அதிக அளவில் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம். மேலும் தனியார் உதவியுடன் அனல் மின்நிலையங்களை ஆங்காங்கே அமைத்து சிறிய அளவில் உற்பத்தி செய்வது.பெரும்பாலான கிராமங்களைத் தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் தத்தெடுத்து மின்தடையே இல்லாமல் செய்ய மாநில அரசு அதிக உதவி அளிக்கலாம்.அடுத்ததாக, தலைக்குமேல் தொங்கும் கத்தியாக இருப்பது பள்ளி, கல்லூரி கல்விக் கட்டண விவகாரம். தனியார் பள்ளிகளின் பகல் கொள்ளையைத் தடுக்க உடனடியாகச் சட்டம் இயற்றி மாநில அரசு நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அனைத்துக் கல்வி நிறுவனங்களின் கட்டண விவரங்களைக் கண்காணிக்க வேண்டும்.வேலைவாய்ப்பகங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பத் தக்க நடவடிக்கை தேவை. தேர்தலின்போது பல கிராமங்களில் வேட்பாளர்களுக்குப் பெரிதும் தலைவலியாக இருந்தது சாலை, குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதிகள் இல்லாததுதான். எனவே, இந்த அடிப்படை வசதிகளை மேற்கொள்ள விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரேஷனில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டாலும் அதில் முறைகேடுகள் பெருமளவில் காணப்படுகின்றன. அதைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொருள்கள் வழங்க பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் கிடையாது. அவர்களை நியமிப்பதன் மூலம் இதுபோன்ற தவறுகள் களையப்படலாம்.தமிழகத்தின் பல பகுதிகளில் ஆறுகளிலிருந்து மணல் கடத்தப்படுவதும், கனிம வளங்கள் கடத்தப்படுவதும் இன்னும் முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. அதைத் தடுத்து இயற்கை வளத்தைக் காப்பாற்ற வேண்டும்.விவசாயிகளுக்கு உரிய நிவாரணம், மானிய உதவி, வேளாண்மை உற்பத்திக்குப் புதிய யுக்திகள், கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு நியாயமான கொள்முதல் விலை, வெங்காயம், மஞ்சள், பூண்டு போன்ற வேளாண் பொருள்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க விவசாயிகளுக்கு தகுந்த ஊக்கமும், உதவியும் அளிக்க வேண்டியது கட்டாயம்.ரவுடிகள் தொல்லை, கட்டப்பஞ்சாயத்து, கொலை, ஆள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடக்காமல் சட்டத்தைக் கடுமையாக்கலாம். அரசியல் தலையீடு இல்லாமல் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும் வகையில் பாரபட்சமில்லாத ஆட்சி அமைந்தால் மக்கள் நம்பிக்கை வீண் போகாது

திங்கள், 11 ஏப்ரல், 2011

ஓட்டு போடுங்க

யோசித்து வாக்களித்தால் நன்று'



கண்ணியமான தேர்தல் - 2011 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆம்பூர் ஜமாத்தே இஸ்லாமி இந்த் அமைப்பு தினந்தோறும் வாக்காளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறது. சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ள எஸ்எம்எஸ்-ல் கூறப்பட்டுள்ளதாவது: தன் சீட்டுக்கு பணம் கொடுத்தார் - அன்று. நம் ஓட்டுக்கு பணம் கொடுத்தார் - இன்று. நாளை நம் நாட்டுக்கு எதை கொடுப்பார் என்று நாம் யோசித்து வாக்களித்தால் நன்று. ஜனநாயகம் காப்போம், பண நாயகம் ஒழிப்போம். கடமையை செய்வோம் கண்ணியம் காப்போம்