திங்கள், 18 ஏப்ரல், 2011

காத்திருக்கும் கடமைகள்

ஓருவழியாகத் தேர்தல் திருவிழா ஓய்ந்துவிட்டது. பலருக்குக் கிலியும், சிலருக்கு வலியும் இத்தேர்தல் ஏற்படுத்தியது என்றால் அதில் வியப்பில்லை. எனவே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பது மட்டுமே அடுத்த கட்ட எதிர்பார்ப்பு. இதுவரை எப்படி நடந்ததோ அது இம்முறை மாறிவிட்டது என கூறும் அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இருந்தது. நினைத்ததை முழுவதுமாக சாதிக்கமுடியாவிட்டாலும், இனி வரும் தேர்தலில் இந்த பயம் நிச்சயம் இருக்கும். அதுவரை ஜனநாயகத்துக்கு வெற்றி என்றே கருதலாம்.அதைச் செய்வேன், இதைச் செய்வேன் எனக் கூறியவர்கள் அதிகாரத்துக்கு வந்ததும் முதலில் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும் என்பதுதான் அடுத்தகேள்வி. இப்போதைய எதிர்பார்ப்பு புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அரசு பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்குக் காத்திருக்கும் கடமைகள் ஏராளம்.ஏழைகளின் பிரச்னைகளை முதலில் தீர்க்க வேண்டும். மாறாக தனிமனித வெறுப்புகள், பழிவாங்கல்கள் இருக்கக் கூடாது.கடந்தமுறை செயல்படுத்தாமல் நிறுத்தப்பட்டவை அல்லது புதிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதவிர, மக்கள் எதிர்பார்க்கும் பல்வேறு பிரச்னைகளை புதிய அரசு தீர்க்க வேண்டியது மிக அவசியம்.இப்போதைய தலையாய பிரச்னையாக இருப்பது மின்வெட்டு. இதைத் தவிர்ப்பதற்கு உடனடியாகச் செய்ய வேண்டியவை அதிக அளவில் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம். மேலும் தனியார் உதவியுடன் அனல் மின்நிலையங்களை ஆங்காங்கே அமைத்து சிறிய அளவில் உற்பத்தி செய்வது.பெரும்பாலான கிராமங்களைத் தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் தத்தெடுத்து மின்தடையே இல்லாமல் செய்ய மாநில அரசு அதிக உதவி அளிக்கலாம்.அடுத்ததாக, தலைக்குமேல் தொங்கும் கத்தியாக இருப்பது பள்ளி, கல்லூரி கல்விக் கட்டண விவகாரம். தனியார் பள்ளிகளின் பகல் கொள்ளையைத் தடுக்க உடனடியாகச் சட்டம் இயற்றி மாநில அரசு நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அனைத்துக் கல்வி நிறுவனங்களின் கட்டண விவரங்களைக் கண்காணிக்க வேண்டும்.வேலைவாய்ப்பகங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பத் தக்க நடவடிக்கை தேவை. தேர்தலின்போது பல கிராமங்களில் வேட்பாளர்களுக்குப் பெரிதும் தலைவலியாக இருந்தது சாலை, குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதிகள் இல்லாததுதான். எனவே, இந்த அடிப்படை வசதிகளை மேற்கொள்ள விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரேஷனில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டாலும் அதில் முறைகேடுகள் பெருமளவில் காணப்படுகின்றன. அதைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொருள்கள் வழங்க பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் கிடையாது. அவர்களை நியமிப்பதன் மூலம் இதுபோன்ற தவறுகள் களையப்படலாம்.தமிழகத்தின் பல பகுதிகளில் ஆறுகளிலிருந்து மணல் கடத்தப்படுவதும், கனிம வளங்கள் கடத்தப்படுவதும் இன்னும் முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. அதைத் தடுத்து இயற்கை வளத்தைக் காப்பாற்ற வேண்டும்.விவசாயிகளுக்கு உரிய நிவாரணம், மானிய உதவி, வேளாண்மை உற்பத்திக்குப் புதிய யுக்திகள், கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு நியாயமான கொள்முதல் விலை, வெங்காயம், மஞ்சள், பூண்டு போன்ற வேளாண் பொருள்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க விவசாயிகளுக்கு தகுந்த ஊக்கமும், உதவியும் அளிக்க வேண்டியது கட்டாயம்.ரவுடிகள் தொல்லை, கட்டப்பஞ்சாயத்து, கொலை, ஆள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடக்காமல் சட்டத்தைக் கடுமையாக்கலாம். அரசியல் தலையீடு இல்லாமல் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும் வகையில் பாரபட்சமில்லாத ஆட்சி அமைந்தால் மக்கள் நம்பிக்கை வீண் போகாது

திங்கள், 11 ஏப்ரல், 2011

ஓட்டு போடுங்க

யோசித்து வாக்களித்தால் நன்று'



கண்ணியமான தேர்தல் - 2011 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆம்பூர் ஜமாத்தே இஸ்லாமி இந்த் அமைப்பு தினந்தோறும் வாக்காளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறது. சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ள எஸ்எம்எஸ்-ல் கூறப்பட்டுள்ளதாவது: தன் சீட்டுக்கு பணம் கொடுத்தார் - அன்று. நம் ஓட்டுக்கு பணம் கொடுத்தார் - இன்று. நாளை நம் நாட்டுக்கு எதை கொடுப்பார் என்று நாம் யோசித்து வாக்களித்தால் நன்று. ஜனநாயகம் காப்போம், பண நாயகம் ஒழிப்போம். கடமையை செய்வோம் கண்ணியம் காப்போம்

சனி, 9 ஏப்ரல், 2011

இலவசமின்றிஆட்சியைபிடிக்கவழி

election 2011 இலவசங்கள் கொடுக்காமல் ஆட்சியை பிடிக்க வழி
A+ A-

மானியங்கள் உதவியுடன் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் உண்மையில் பயன் உள்ளதா என் கேள்வி எழுந்துள்ளது. 2008 - 09 நிதியாண்டு பட்ஜெட்டில் 18 ஆயிரத்து 956 கோடி ரூபாயை நலத்திட்டங்களுக்கு செலவு செய்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது ஆண்டு மொத்த வருவாயில் 35 சதவீதம். நடப்பாண்டு பட்ஜெட்டில் மூலதன செலவிற்காக 9 ஆயிரத்து 140 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இது மொத்த வருவாயில் 17 சதவீதம். இதே போன்ற திட்டங்களுக்கு 2009 - 10 நிதி ஆண்டில் 20 ஆயிரத்து 55 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது இந்த ஆண்டு வரவில் 37 சதவீதம். இதில் சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சலுகைகளாக வழங்கப்பட்டுள்ளன.


* இலவச மின்சார மானியம் - ரூ.295 கோடி
* அரசு காப்பீட்டு மானியம் - ரூ.750 கோடி
* இலவச கலர் "டிவி' வழங்குதல் - ரூ.500 கோடி
* பொது வினியோக உணவு மானியம் - ரூ.3,750 கோடி
* வீட்டு வசதி - குடிசை மாற்று வாரியம் - ரூ.1,800 கோடி
* சமத்துவபுரம் - ரூ.75 கோடி
* வீடு கட்ட மானியம் - ரூ.262 கோடி
* இலவச காஸ் அடுப்பு திட்டம் ரூ.140 கோடி
* வேலையில்லாதோர் இலவச மானியம் - ரூ.60 கோடி
மொத்த மானியம் - ரூ.7,632 கோடி


மொத்த வருவாயில் 14 சதவீதம் இலவச திட்டங்களுக்கு மானியமாக ஒதுக்க பட்டுள்ளது. இதற்கு மேல் அரசு வாங்கிய கடன்களுக்கு வட்டி மூலம் 6 ஆயிரத்து 704 கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. மொத்த நிதி பற்றாக்குறையான 12 ஆயிரத்து 860.45 கோடியில் மூலதன ஒதுக்கீடுக்கான செலவு 8 ஆயிரத்து 609.12 கோடியை கழித்தாலும், நிதி பற்றாக்குறை மட்டுமே 5 ஆயிரத்து 19.54 கோடி ரூபாய் இருக்கும். மொத்த இலவச மானியங்களுக்கு ஒதுக்கப்பட்ட 7 ஆயிரத்து 632 கோடி ரூபாயை தவிர்த்து பார்த்தால், அரசுக்கு உபரி நிதியே கிடைக்கக் கூடும். இதை வைத்தே இந்த மானியங்கள் பயனுள்ள திட்டங்களா இல்லையா என்பதை அறியலாம்.


இலவச "டிவி' திட்டம், மக்கள் வேலை செய்யும் காலத்தை குறைக்கிறதே தவிர, திறமையை வெளிக்காட்ட வழி செய்யவில்லை. சில கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமே பயன் அடைகின்றனர். இதற்கான மின் தேவையும் அதிகரிக்கும். இலவச காப்பீட்டு திட்டத்தின் மூலம் 165 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை மக்கள் பெற்றனர். ஆனால் அரசு 750 கோடி ரூபாய் பிரிமிய தொகை செலுத்த நிதி ஒதுக்கி உள்ளது. அதாவது நான்கரை மடங்கு அதிக பிரிமியம் செலுத்தி இத்திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதனால் காப்பீட்டு நிறுவனத்துக்கு தான் வருமானம். இதற்கு பதில் பொது மருத்துவமனைகளை விரிவுபடுத்தி எல்லா வகையான உயர் சிகிச்சை வசதிகளையும் நிரந்தரமாக கிடைக்கச் செய்யலாம்.


வேலை இல்லாதவர்களுக்கு உதவி தொகை மானியம் என்று 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் வேலைக்கு போக முயற்சிக்காமல், கையெழுத்திட்டு பணம் பெறும் சோம்பேறித்தனம் உருவாகி விட்டது. நியாய விலைக் கடைகள் மூலம் ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைப்பதால் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போகும். இதனால் நாட்டின் உற்பத்தி பாதிக்கும். தற்போதைய நிலையில் சாதாரண வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே கடினமாக உள்ளது. எப்படியும் வேலையை முடிக்க வேண்டும் என்போர் கூடுதலாக கூலியை கொடுத்து முடிக்க முற்படுவர். இதனால் மேலும் பொருட்கள் விலை கூடும். இப்படி, மானியத்தை கொடுக்கும் கொள்கைகளை விட்டு, அடிப்படை தேவைகளான, குடிநீர், மருத்துவம், போக்குவரத்து, சாலை, மின் உற்பத்தி போன்ற அத்தியாவசிய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்தால், இலவசங்கள் கொடுக்காமலே அந்த அரசு ஆட்சியை பிடிக்க முடியும். கட்சிகள் சிந்திக்க வேண்டும். வரும் காலங்களில் அரசுகள் அவ்வாறு அமைந்தால், மக்கள் புண்ணியம் செய்தவர்கள்.thankyoudinamalar