வெள்ளி, 30 டிசம்பர், 2011

புயல்

புயலுக்கு பெயர் வைக்கும் முறை : தானே புயல் பெயர் வந்தது எப்படி?

               சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குப்படுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.

          இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொன்றாக புயல்களுக்கு சூட்டப்படுகின்றன. கடந்த 2004ம் ஆண்டு முதல் வங்கக்கடல் புயல்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டுட வருகின்றன.

            கடந்த ஆண்டு 5 தடவை புயல் ஏற்பட்டது. அந்த புயல்களுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்து, பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்து பெயரை இலங்கை, பெட் பெயரை இந்தியா தேர்வு செய்து கொடுத்திருந்தன. இதில் லைலை, ஜல் இரு புயல்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.  2011ம் ஆண்டு நடப்பு சீசனில் கடந்த அக்டோபர் மாதம்தான் முதல் புயல் தோன்றியது. அந்த புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வு செய்து கொடுத்திருந்த கெய்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு இரண்டாவதாக தற்போதைய புயல் தமிழ்நாட்டை குறிவைத்து வந்து கொண்டிருக்கிறது.

              இந்த புயலுக்கு பட்டியலில் உள்ள பெயர்களில் இருந்து தானே என்ற பெயர் தேர்வு செய்து சூட்டப்பட்டுள்ளது. இந்த தானே பெயரை வழங்கியது மியான்மர் நாடாகும். மியான்மர் நாட்டின் ஜோதிடவியல் நிபுணர் மின் தானே கா பெயரை குறிப்பிடும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.  இந்த வரிசையில் அடுத்து வரும் புயல்களுக்கு முர்ஜன் (ஏமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (இந்தியா) என்று பெயர்கள் சூட்டப்பட உள்ளன

ஞாயிறு, 27 நவம்பர், 2011

வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல்

சமூக வலைதளங்கள் மூலம், பள்ளி, கல்லூரி மாணவியரை குறிவைத்து மோசடி செய்யும் வக்கிர கும்பல்களின் செயல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் மாணவியர் மட்டுமின்றி, பெற்றோரும் உஷாராக இருக்க வேண்டும்.

இன்றைய நவீன உலகில், மக்களின் அடிப்படை தேவைகளில், மொபைல்போன் மற்றும் இன்டர்நெட்டும் இடம்பிடித்துள்ளன. பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள இன்டர்நெட் உதவுகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் சாதகம், பாதகம் இரண்டும் கலந்திருக்கும். அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை இன்டர்நெட் கொண்டுள்ள போதும், சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளவில் நடக்க இது முக்கிய காரணமாக உள்ளது.பிறருடன் பேசவும், எஸ்.எம். எஸ்., அனுப்பவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மொபைல்போன்கள், தற்போது இன்டர்நெட் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது; வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.பண்டிகை நாட்கள் மட்டுமின்றி, தினமும் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அதன் மூலம் தங்களின் அன்பை பரிமாறி கொள்வதை வழக்கமாக கொண்டு பலர் செயல்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பு வயதினரிடமும் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) எஸ். எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


"பேஸ்புக்' 'டிவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒருவர் தங்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பதிவு செய்வதன் மூலம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு பகுதிகளிலுள்ள தங்களுடைய நண்பர்கள்,உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இதன் காரணமாக மொபைல் போன்களிலிருந்து எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு பலர் "குட் பை' சொல்ல துவங்கிவிட்டனர்.சமூக வலைதளங்களில் தங்களின் விபரங்களை ஒருவர் பதிவு செய்யும் போது, தகவல்களுடன் சேர்த்து தங்கள் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். வலைதளங்கள் மூலம் ஒருவருடன் நண்பர்களாக வேண்டும் என்றால், தங்களின் விருப்பத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு குறுந்தகவலாக அனுப்ப வேண்டும்; மறுமுனையில் சம்பந்தப்பட்ட நபர் அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இருவரும் வலைதளத்தில் நண்பர்களாகி கொள்ளவும், தங்களின் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் முடியும்.உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள தங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடவும், உறவுகளை இணைக்கும் பாலமாகவும் உதவி வரும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவியருக்கு எதிரான சைபர்கிரைம் குற்றங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.


சமூக வலைதளங்களில் பெண்களின் பெயர்களை டைப் செய்தால், குறிப்பிட்ட பெயருக்கு 25க்கும் மேற்பட்டவர்கள் குறித்த முழு விபரங்கள் போட்டோக்களுடன் வெளியிடப்படுகின்றன. இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் ஆசாமிகள், அறிமுகமில்லாத பெண்களுக்கு தாங்களாகவே, "நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்' என தெரிவிக்கும் தகவல்களை அனுப்புகின்றனர். தங்களுக்கு தெரியாத நபர்கள் அனுப்பும் இத்தகைய வேண்டுகோளை ஏற்காமல் நிராகரிக்கும் பெண்கள் எவ்வித ஆபத்திலும் சிக்காமல் தப்பிவிடுகின்றனர். எனினும் தங்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும் பெண்களிடம் நல்லவர்களை போல் சில நாட்கள் நடித்து அவர்களின் மொபைல்போன் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்கின்றனர். நாளடைவில் நேரில் சந்திப்பது, பொது இடங்களுக்கு சென்று வருதல், பண பரிமாற்றம் என துவங்கி, ஏமாறும் அபலைப் பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றியும், அவர்களிடமிருந்து பணம்,நகை, "லேப்டாப்' உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தும் சென்றுவிடுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் பலர்,போலீசில் புகார் தெரிவிக்க முன்வருவதில்லை.


கோவை மாநகர சைபர் கிரைம் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "கம்ப்யூட்டர்களில், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்தும்போது, அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்பு வைத்து கொள்வதை பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். தங்களின் அந்தரங்க தகவல்கள் குறித்து நெருங்கிய தோழிகளுடன் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது. பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். தனி அறையில் வைத்து அவர்கள் இணையதளங்களை இயக்க அனுமதிக்க கூடாது' என்றனர்.


பெற்றோர், ஆசிரியர், உடன்பிறப்புகள், உறவினர்கள் உள்ளிட்டவர்களின் அறிவுரை ஒருபுறமிருந்தாலும், இன்டர்நெட் பயன்படுத்தும்போது பெண்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்...நன்றி.தினமணி.....

வெள்ளி, 11 நவம்பர், 2011

உள்ளாட்சி தேர்தல் ஒரு பார்வை

ஜெயலலிதா எதை எதிர்பார்த்தாரோ அது கிடைத்துவிட்டது..! கருணாநிதி எதை எதிர்பார்க்கவில்லையோ அதுவும் கிடைத்துவிட்டது. விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் செல்வாக்கு என்ன என்பதையும் அவர்களுக்கு உணர்த்தியாகிவிட்டது. வைகோவுக்கு அவரது பெயருக்குள்ள செல்வாக்கு இருப்பது மட்டுமே மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஜெயிக்க வைக்கக் கூடிய அளவுக்கான தொண்டர்களை இன்னமும் அவர்கள் பெறவில்லை என்பது சொல்லப்பட்டுவிட்டது. பாரதீய ஜனதாவுக்கு மாற்று ஆள் தேடிக்கிட்டிருக்கோம் என்ற சிக்னலை கொடுத்தாகிவிட்டது.. ஆனால் தமிழகத்து மக்களுக்குத்தான் என்ன கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை..!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலே முறைகேடாக நடத்தப்பட்ட ஒரு தேர்தல் என்று நான் கருதுகிறேன்.. டி.என்.சேஷன் காலத்தில் மயிலாப்பூர் இடைத்தேர்தலில் நடத்திய அத்தனை அட்டூழியங்களையும் வொயிட் அண்ட் வொயிட் டிரெஸ் போட்டு கச்சிதமாக அரிவாள், கத்திகளை கையில் எடுக்காமல், வன்முறையை கொஞ்சமும் சிந்தவிடாமல், கணிணியைப் பயன்படுத்தியே அனைத்துக் கட்சிகளின் கழுத்தையும் அறுத்துவிட்டார் ஜெயலலிதா.

இப்படித்தான் தேர்தலை நடத்தி, இப்படித்தான் ஜெயித்தாக வேண்டும் என்று ஜெயலலிதா ஏற்கெனவே நினைத்திருந்ததால் அதற்கேற்ற தலையாட்டி பொம்மையாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சோ.அய்யரை அந்தப் பதவியில் உட்கார வைத்ததே இந்த முறைகேட்டின் முதல் காட்சி.

எந்தெந்த தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்பது ஜெயல்லிதாவுக்கும், சோ.அய்யருக்கும் மட்டுமே தெரியும் என்ற அளவுக்கு ஏற்பாடுகளை செய்துவிட்டு, தான் மட்டும் கனகச்சிதமாக பெண்களுக்குரிய தொகுதிகளில் பெண்களையே தேடிப் பிடித்து அறிவித்துவிட்டு அதன் பின்பே தேர்தல் கமிஷனின் அறிவிப்பை வெளியிடச் செய்த ராஜதந்திரம், கோவிலில் கன்னம் வைத்து திருடுவதற்குச் சமமானது..!

தேர்தல் தேதி அறிவித்த பின்பும், கூட்டணி உண்டா இல்லையா என்பதையே தன்னை நம்பி வந்த கட்சிகளிடம் தெரிவிக்காமல் நாட்களைக் கடத்தி அவர்களை அலைபாய வைத்து கடைசியில் கொடுப்பதை வாங்கிக் கொண்டு கையது, வாயது பொத்திக் கொண்டு செல்லுங்கள் என்று சர்வாதிகாரமாகச் சொல்லி அவர்களை நட்டாற்றில்விட்டது நம்பிக்கை துரோகம். இதுதான் அரசியல் ராஜதந்திரம் எனில், இதற்கான பலனும் நிச்சயமாக ஜெயலலிதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்றேனும் ஒரு நாள் கிடைக்கத்தான் போகிறது..!

தி.மு.க.வின் அமைச்சர்கள் பலர் மீதும் வழக்குகள் பாய்ந்தவண்ணம் இருந்தன. இருக்கின்றன. இதில் பலரும் தவறுகள் செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த்தில் தவறில்லை. ஆனால் அதே சமயத்தில் தி.மு.க. ஆட்சியில் இவர்கள் சொல்பேச்சு கேட்டு பாதிக்கப்பட்ட பொது மக்களின் புகார்களை வாங்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது இந்தக் கைதுகளைக்கூட தனது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தத்தான் என்பது தெளிவாகவே தெரிகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அவரது மகன் கைப்புள்ள ஸ்டாலினும் தி.மு.க. ஏன் ஆட்சியை இழந்தது என்பதை புரிந்து வைத்திருந்தும் அது தெரியாததுபோல் நடிக்கிறார்கள். திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் நேருவையே நிறுத்தியது படுமுட்டாள்தனம். தி.மு.க. என்ற கட்சி மீதுள்ள கோபத்தைவிட நேரு மீதுதான் திருச்சி மாவட்ட மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதைக்கூட புரிந்து கொள்ளாத இவர்களது கட்சித் தலைமையை என்னவென்றுதான் சொல்வது..?

நேரு மற்றும் அவரது உறவினர்களின் ஆதிக்கம் அரசு அதிகாரத்தில் எத்தனை தூரம் மலிந்து போய் இருந்தது என்பது திருச்சி மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாக உள்ளது. இத்தனை நடந்தும் மீண்டும் நேருதான் எமது வேட்பாளர் என்று தி.மு.க. தலைமை அறிவித்ததற்கு கிடைத்த செருப்படிதான் சென்ற தேர்தல் வித்தியாசத்தைவிட 1 மடங்கு வித்தியாசத்தை கூட்டி பொதுமக்கள் அளித்தது..! நேருவைவிட வேறு யாரையாவது நிறுத்தியிருந்தால்கூட வெற்றி வித்தியாசம், இந்த அளவுக்கு போயிருக்காது என்றே நான் நம்புகிறேன்..!

உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவின் திருவிளையாடல்களை முன்னரே ஊகித்துவிட்ட கருணாநிதி, தானும் அவசரம் அவசரமாக வேட்பாளர்களை நிறுத்தி வைத்து களத்தில் குதித்துவிட்டார். ஆனால் எதைக் காரணமாக வைத்து மக்களிடம் ஓட்டு வாங்குவது என்பதில்தான் தவறிவிட்டார். சந்திக்கு சந்திக்கு, ஊருக்கு ஊர் ஜெயலலிதா ஊதித் தள்ளிய ஸ்பெக்ட்ரம் ஊழலையும், தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் அட்டூழியத்தையும் கருணாநிதியாலும், ஸ்டாலினாலும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியவில்லை. நடப்பவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்.

தமிழகத்தில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன இவை அனைத்திலும் சேர்த்து மொத்தம் 1,32,467 பதவியிடங்கள் உள்ளன. இதில், 19,646 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அ.தி.மு.க., 9,864 பதவிகளை கைப்பற்றியுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, சேலம், தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு ஆகிய 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க.வே கைப்பற்றியுள்ளது.

10 மாநகராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளில், 580 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. 124 நகராட்சிகளில் 89 நகராட்சித் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது 1,680 நகராட்சி வார்டுகளையும், 285 பேரூராட்சிகளையும், 2,849 பேரூராட்சி வார்டுகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 574 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 3,797 பதவிகளையும் அதிமுக பிடித்துள்ளது. அதிமுக மொத்தமாக 30.02 சதவீத வாக்குகளை அள்ளியுள்ளது. நகர்ப்புறத்தில் 39.24 சதவீத வாக்குகளையும், கிராமப்புறங்களில் 38.69 சதவீத வாக்குகளையும் அக்கட்சி பெற்றுள்ளது.

அதிமுகவின் இந்த மாபெரும் வெற்றிக்கு என்ன காரணம் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. சமச்சீர் கல்வி திட்டத்தில் ஜெயல்லிதா செய்த குளறுபடி மட்டுமே அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு அவர் மீது அதிருப்தி ஏற்பட்ட ஒரே காரணம். அந்த ஒரு காரணத்தை அப்போதே மக்கள் மறந்துவிட்டார்கள் போலும். மேலும், தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது... இந்தம்மா ஆட்சிக்கு வந்தால்தான் இதுவெல்லாம் நடக்கும்போலிருக்கு என்ற நம்பிக்கையை மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த வெற்றிகள் ஜெயலலிதாவிற்கு கிடைத்திருக்கிறது.

இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தான் சிறைக்குள் போகவிருக்கும் நெருக்கடியான காலக்கட்டத்தில் கட்சிக்குக் கிடைத்திருக்கும் இந்த ஜாக்பாட்டை ஜெயலலிதா எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை..

தி.மு.க. உள்ளாட்சி அமைப்புகளில் 4059 பதவிகளை கைப்பற்றியுள்ளது. 23 நகராட்சித் தலைவர் பதவியையும் 121 பேரூராட்சித் தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றியுள்ளது. 10 மாநகராட்சி வார்டுகளில் 129 கவுன்சிலர் பதவிகளையும், நகராட்சி வார்டுகளில் 963 பதவிகளையும், பேரூராட்சி வார்டுகளில் 1,820 பதவிகளையும், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 27 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 976 பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. திமுகவுக்கு 26.09 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இக்கட்சிக்கு நகர்ப்புறங்களில் 26.67 சதவீத வாக்குகளும், கிராமப்புறங்களஇல் 25.71 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

அ.தி.மு.க.வுக்கு அடுத்த நிலையில் தி.மு.க. என்றாலும் 10 மாநகராட்சிகளையும் ஒருசேர பறி கொடுத்த அபல நிலையில் தி.மு.க. உள்ளது. மதுரையில் குட்டி முதல்வராக கோலோச்சிய அஞ்சாநெஞ்சன் அழகிரியின் சொந்த வீடு இருக்கும் சத்யசாய் நகரை உள்ளடக்கிய வார்டில் தி.மு.க. உறுப்பினர் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதை மதுரை மக்கள் நல்ல சகுனமாகத்தான் பார்க்கிறார்கள்.. 2-வது இடத்தைக் கூட பிடிக்க முடியாமல் 871 ஓட்டுக்களே பெற்று 4-வது இடம் எனில், அழகிரியின் மீது அந்தப் பகுதி மக்களுக்கு இருக்கும் பாசமும், தி.மு.க. மீதான பற்றும் தெளிவாகவே புரிகிறது..!

இது மட்டுமா.. சென்னையில் தமிழினத் தலைவர் குடியிருக்கும் கோபாலபுரம் பகுதியின் 111-வது வார்டையும் முதன்முறையாக அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.. தான் குடியிருக்கும் பகுதியிலேயே செல்வாக்கை இழந்துவிட்டார் தாத்தா. கூடவே தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் அமைந்திருக்கும் தேனாம்பேட்டை 117-வது வார்டிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது.

இப்படி அ.தி.மு.க.வுக்கு மாற்றாக உள்ள தி.மு.க.வுக்கு மரண அடி கொடுத்திருக்கும் நிலையில் தி.மு.க. தற்போது தனது கட்சியையும், கட்சியினரையும் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இந்தக் கேவலமான தோல்வி எதனால்.. என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் மிகவும் சென்சிட்டிவ்வான கல்வி விஷயத்தில் தாறுமாறாக விளையாடினார். இதனை அவர்களின் கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைவருமே கண்டித்தும், ஏசியும் பேசி வந்தார்கள். இந்தக் குழப்பத்தை ஒருவாறு சமாளித்திருந்தாலும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இப்போதும் பிள்ளைகளுக்காக வீட்டில் கஷ்டப்படுவது அவர்கள்தானே.. ஜெயலலிதாவுக்கு நிச்சயம் ஒரு ஷாக் கொடுப்பார்கள் என்று இந்த ஒரு விஷயத்தை வைத்து மட்டுமே கங்கணம் கட்டி அலட்சியப்படுத்தினார்கள் தி.மு.க. தலைவர்கள்.
மக்கள் இதனையொரு பொருட்டாகவே கருதவில்லை என்பது இந்த்த் தேர்தலின் மூலம் தெரிந்துவிட்டது.

இனி தி.மு.க. செய்ய வேண்டியது அடுத்த வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஊழல் மயமான கட்சி என்ற அவப் பெயரிலிருந்தும், அராஜகம், ரவுடிகள், குண்டர்களுடன் நெருங்கியத் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களிடமிருந்தும் கட்சியைக் காப்பாற்ற வேண்டியதும் இருக்கிறது. இதனை முறைப்படி செய்தால், அதன் பலன் அப்போது அவர்களுக்குக் கிடைக்கும். இல்லையெனில் அடுத்த பொதுத் தேர்தலில் ஒரு எம்.பி. தொகுதியில்கூட ஜெயிக்க முடியாமல் போகும் வாய்ப்புண்டு..!

தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு தன்னைவிட்டால் மாற்றில்லை என்று செயல்பட்ட விஜயகாந்துக்கும் கொஞ்சம் அதிர்ச்சி வைத்தியம் கிடைத்துள்ளது. 857 பதவிகளை மட்டுமே பிடித்து சுயேச்சைகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது தே.மு.தி.க. 2 நகராட்சித் தலைவர் பதவிகள், 2 பேரூராட்சித் தலைவர் பதவிகள், மாநகராட்சிகளில் மொத்தமே 8 கவுன்சிலர் பதவிகள் இவ்வளவுதான் புரட்சிக் கலைஞருக்குக் கிடைத்துள்ளது.

ஆனால் இக்கட்சியின் வாக்கு வங்கி கிட்டத்தட்ட ஒரே நிலையாக உள்ளது. கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் தனியாக போட்டியிட்ட இக்கட்சிக்கு 8.38 சதவீத வாக்குகள் கிடைத்தன. லோக்சபா தேர்தலில் 10.01 சதவீத வாக்குகளை தே.மு.தி.க. பெற்றது. தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு 10.11 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த லோக்சபா தேர்தலைவிட லேசான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது தேமுதிக. இருந்தாலும் வெற்றி பெற்ற இடங்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த காரணத்தினாலும், தி.மு.க. மீதான கடுமையான எதிர்ப்பில் இருந்த காரணத்தினாலும்தான் தற்போது தான் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தில் இருப்பதை விஜயகாந்த் உணராமல் இருக்கிறார். இதற்கான பாடம் இது.! சட்டசபையில் உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக அவர் செயல்படவில்லை. ஜெயல்லிதா கோபித்துக் கொள்வாரே என்பதற்காக அமைதியாக இருந்த அவரை இனியும் இதுபோல் அமைதியாகவே இருந்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் வாக்காளர்கள்.

இனி வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது.. மிஞ்சிப் போனால் 3-வது அணியாக பல கட்சிகளை சேர்த்து வைத்து போராட வேண்டும். அப்படி போரடினாலும் ஜெயல்லிதா மக்களுக்கு வெறுப்பு வரும் அளவுக்கு ஆட்சியை நடத்த வேண்டும். அப்போதுதான் ஓட்டுக்கள் மாறி விழுகும். அப்படியொரு சூழலுக்கு ஜெயல்லிதா தனது கட்சியைத் தள்ள மாட்டார் என்பதனால் ஒரு முறை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அனுபவித்த பெருமை மட்டுமே விஜயகாந்துக்கு கிடைக்கும் என்றே நம்புகிறேன்..!

4-வது பெரிய கட்சியும் தமிழர் விரோதக் கட்சியுமான காங்கிரஸ் கட்சிக்கும் இத்தேர்தலில் மரண அடி கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் கிடைத்த பதவிகள் 740. இதில், 24 பேரூராட்சிகளும் அடங்கும். அந்தக் கட்சிக்கு ஒரு நகராட்சிகூட கிடைக்கவில்லை. இக்கட்சிக்கு 5.71 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.

தங்கபாலுவும், இளங்கோவனும் தங்களுக்கு இடையேயான விளையாட்டை நிறுத்திக் கொண்டு ஒரே ஜீப்பில் தேர்தல் பிரச்சாரம் செய்தாலும், காங்கிரஸை மக்கள் சீண்டவில்லை. இப்போது ஜெயித்திருப்பவர்களும் அவரவர் பகுதிகளில் தங்களுக்கு இருக்கும் சொந்த செல்வாக்கினால் ஜெயித்தவர்கள் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.

வாக்காளர்கள் அடுத்தபடியாக வெளுத்துக் கட்டியிருப்பது பாட்டாளி மக்கள் கட்சியை. எங்களைப் புறக்கணித்துவிட்டு யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றெல்லாம் அறைகூவல் விடுத்த டாக்டர் ராமதாஸின் இன்றைய நிலைமை அதோ கதிதான்..! 2 மாநகராட்சி கவுன்சிலர்கள், 60 நகராட்சி கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்துக்களில் 2 தலைவர் பதவி, 108 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினராக 3, மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக 225 என்று மொத்தமாக 400 பதவிகளை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. இக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவிகிதம் வெறும் 3.55 மட்டுமே..!

இவருக்கு இது தேவைதான். தனது மகனது நல்வாழ்க்கைக்காகவே கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார் என்பதை தமிழகத்து மக்கள் தெள்ளத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி வலுவாக இருப்பதாக சொல்லிக் கொள்ளும் தமிழகத்தின் வட மாவட்டங்களிலேகூட ஒரு நகரசபையைக் கூட இவர்களால் கைப்பற்ற முடியவில்லை என்னும்போது கட்சி மக்களிடத்தில் நம்பிக்கையைப் பெற இன்னமும் போராட வேண்டியிருக்கிறது என்பதை இப்போதாவது ராமதாஸ் புரிந்து கொள்ளட்டும்..!

இந்தத் தேர்தலில் எனக்கு வருத்தமளித்த விஷயம் ம.தி.மு.க.வை மக்கள் புறக்கணித்திருப்பதுதான். தற்கால அரசியலுக்கு ஏற்றவகையிலான குணநலன்களை பெற்றிருக்கும் வைகோவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். ஆனால் வைச்சால் குடுமி, அடித்தால் மொட்டை என்பதைப் போல வாக்காளப் பெருங்குடி மக்கள் அதிமுகவை விட்டால், தி.மு.க.வுக்கும், இவரைவிட்டால் அவருக்குமாக ஓட்டளித்து புதியவர்களை வளர்த்துவிட மறுக்கிறார்கள். தமிழகத்தின் சீரழிவுக்கு நிச்சயமாக ஒரு புறம் தமிழகத்து வாக்காளர்களும் காரணமாவார்கள்.

மதிமுகவுக்கு இந்தத் தேர்தலில் 11 மாநகராட்சி கவுன்சிலர்கள், 1 நகராட்சித் தலைவர், 49, நகர சபை உறுப்பினர்கள், 7 கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், 82 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், 2 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 42 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள் என்று மொத்தம் 193 பதவிகள் கிடைத்துள்ளன. பெற்ற வாக்குகளின் சதவிகிதம் 1.7.

ஈழப் பிரச்சினையில் கடந்த 35 ஆண்டு காலமாக வைகோ எடுத்திருக்கும் நிலையான உறுதிப்பாடு பாராட்டத்தக்க ஒன்று. அதே சமயம், தமிழகத்து விஷயத்தில் அவர் அவ்வப்போது எடுத்த சில முரண்பாடுகள்.. கட்சியினரை தக்க வைத்துக் கொள்ளாதது.. தன்னைத் தவிர நட்சத்திரங்களை கட்சியில் நிலை நிறுத்தாதது போன்ற விஷயங்களால்தான் மக்களுக்கு அவர் மீது இன்னமும் பிடிப்பு வரவில்லை என்றே நினைக்கிறேன். மக்கள் மாற வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அதே நேரத்தில் வைகோவும் அதற்குத் தயார் நிலையில் தனது கட்சியினரை வைத்திருக்க வேண்டும்.. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நான் ஒரு நல்லவன் என்ற சிம்பலை மட்டும் வைத்துக் கொண்டே காலத்தை ஓட்ட முடியும்..?

இந்தத் தேர்தலில் ஆச்சரியமான ஒரு விஷயம் பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கும் சில வெற்றிகள்தான். தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு பெற்றிருக்கும் இக்கட்சி 2 நகராட்சித் தலைவர் பதவி, 4 மாநகராட்சிக் கவுன்சிலர்கள், 37 நகராட்சி கவுன்சிலர்கள், 13 பேரூராட்சித் தலைவர்கள், 181 கவுன்சிலர்கள், 2 வார்டு உறுப்பினர்கள் என குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சி பெற்ற வாக்குகள் சதவிகிதம் 1.35.

வரும்காலத்திலும் இக்கட்சி தனித்து நிற்கும் சூழலே தென்படுவதால் இதனுடைய வளர்ச்சியை மற்றக் கட்சிகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. சிற்சில இடங்களில் பல முக்கிய வேட்பாளர்களின் வெற்றியை இக்கட்சி வேட்பாளர்கள் தடுத்துள்ளார்கள். அகில இந்திய அளவிலான இக்கட்சியின் மதம சார்ந்த கொள்கைகள் மாறாதவரையில் இக்கட்சியின் வாக்கு சதவிகிதம் உயர வ்ழியில்லை என்றே நினைக்கிறேன்..!

தேமுதிகவின் கூட்டணிக் கட்சியாக போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சித் தலைவர்கள், 20 நகராட்சி கவுன்சிலர்கள், 5 டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், 101 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 26 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என்று 159 பதவிகளும் கிடைத்துள்ளன. பெற்ற வாக்குகளின் சதவிகிதம் 1.02

இதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 99 பதவிகளே கிடைத்துள்ளன. 4 மாநகராட்சி கவுன்சிலர்கள், 10 நகராட்சி கவுன்சிலர்கள், 2 டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், 33 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 4 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 46 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என்று கிடைத்திருக்கும் சிபிஐ கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 0.71.

இந்த இருவரின் வாக்கு சதவிகிதம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் குறைந்திருக்கிறது. இதுவரையிலும் அதிமுக, தி.மு.க. என்று மாறி, மாறி கூட்டணி வைத்திருந்த்தால் இவர்களது உண்மையான பலம் என்ன என்பது தெரியாமல் இருந்த்து. இப்போது, இந்தத் தேர்தலின் மூலம் தெரிந்துவிட்டது. இனி இவர்களுக்கு 3-வது அணி மட்டுமே கை கொடுக்கும். அதற்கான முயற்சிகளை செய்வதுதான் இக்கட்சிகளின் எதிர்காலத்திற்கு நல்லது.

இறுதியாக திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி. 1 மாநகராட்சி கவுன்சிலர், 13 நகராட்சி கவுன்சிலர்கள், 12 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 9 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என்று மொத்தமே 35 பதவிகள்தான் இக்கட்சிக்குக் கிடைத்துள்ளன. பாரதீய ஜனதாவைவிடவும் மிகச் சொற்பமான செல்வாக்கில் இருக்கும் இக்கட்சியின் ஆரம்பக் காலத்தை நினைவில்கொண்டால் இது மாபெரும் தோல்வி..!

தமிழகத்தில் கட்சிகளை ஆரம்பிக்கும் அனைவருமே ஆரம்பத்தில் நம்பிக்கையூட்டும்விதமாகவே செயல்படுகிறார்கள். கட்சியின் வட்டச் செயலாளர்கள் டாடா சுமோவில் வலம் வந்து, மாவட்டச் செயலாளர்கள் டயோட்டா குவாலிஸில் வரத் துவங்கியவுடன் கட்சியும் நொண்டியடிக்கத் துவங்குகிறது. இப்படித்தான் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் ஆகிவிட்டது.

கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம் போன்றவற்றில் தனது கட்சியினரின் செயல்பாடுகளை தட்டிக் கேட்க முடியாத நிலையில் இருக்கும் திருமாவளவன் மக்களிடத்தில் அதிகம் நெருங்க முடியாத சூழலில் இருக்கிறார். அவர்களுக்கு செல்வாக்கு அதிகமுள்ள இடங்களில்கூட இந்த நிலைமைதான் என்பதனால் இனி இக்கட்சிக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவளித்து ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை..!

இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தினை சுயேச்சைகள் பெற்றிருப்பதே குறிப்பிடத்தக்கது. 5 நகராட்சித் தலைவர்கள், 55 மாநகராட்சி கவுன்சிலர்கள், 552 நகராட்சி கவுன்சிலர்கள், 64 பேரூராட்சித் தலைவர்கள், 1995 டவுன் பஞ்சாயத்து உறுப்பினர்கள், 655 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள் என்று மொத்தம் 3322 பதவிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சுயேச்சைகள் பெற்ற மொத்த வாக்குகளின் சதவிகிதம் 9.46.

இவர்களில் அநேகம்பேர் பெரிய கட்சிகளில் சீட் கொடுக்கப்படாத்தால் தனியாக நின்றவர்கள். எனவே வெற்றி பெற்ற பின்பும் அவர்கள் சார்ந்த கட்சி உறுப்பினர்களாகவே இருப்பார்கள். அல்லது மீண்டும் கட்சியில் சேர்ந்துவிடுவார்கள். எப்படியோ உள்ளாட்சி அமைப்புகள் என்று வரும்போது மக்கள் பக்கத்து வீட்டுக்காரர், ஊர்க்காரர், தெரிந்தவர், சொந்தக்காரர் என்றெல்லாம் பார்த்தே வாக்களிப்பார்கள் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை..

சட்டசபை தேர்தலிலேயே இமாலய வெற்றி பெற்றிருக்கும் ஜெயல்லிதா இந்த உள்ளாட்சி தேர்தலின் மூலமும் அசுர பலம் பெற்றிருக்கிறார். ஆனாலும் மிக விரைவில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளே செல்ல வேண்டியிருப்பதால், அவருக்குப் பின்னான தலைமை எப்படி கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தப் போகிறது என்று தெரியவில்லை.

தி.மு.க.வின் உட்கட்சிப் பூசல் வெடிக்காதா என்று அ.தி.மு.க.வும், ஜெயலலிதாவும், சசிகலாவும் வெளியில் இல்லாத நிலையில் அதிமுகவை சீர்குலைத்துவிடலாம் என்று தி.மு.க.வும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இரண்டில் எது நடந்தாலும் அது தமிழகத்துக்கு நல்லதே..!


உள்ளாட்சித் தேர்தல்-2011 இறுதி முடிவுகள்


கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம் (நகர் மற்றும் ஊரகப் பகுதிகள்) -கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கான பதவிகள் நீங்கலாக.



மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்



மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சித் தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்



அனைத்து மாநகராட்சிகளுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்



அனைத்து பேரூராட்சிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்



அனைத்து நகராட்சிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்


நன்றி : உண்மை தமிழன்

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

பெருநாள் வாழ்த்து



சனி, 23 ஜூலை, 2011

சம்பாத்தியம்

கடந்த 2010ம் ஆண்டில், தாய்நாட்டிற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய தொகை ரூ.2.53 லட்சம் கோடி

ஜூலை 24,2011,02:50




சென்னை:வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது கடந்த 7 ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகில், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புவோரில் இந்தியர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.உலகில், 190 நாடுகளில், 2கோடியே 70 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், பல்வேறு பணிகளில் ஈடுபட்டு, திரட்டும் வருவாயில், குறிப்பிடத்தக்க தொகையை, இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தாருக்கு அனுப்புகின்றனர்.இந்தியாவில்கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில்வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக, கேரளாவில் இருந்து பணி வாய்ப்புதேடி அரபு நாடுகளுக்கு செல்கின்றவர்கள், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புகின்றனர்.அதுபோன்று, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா,பிரான்ஸ் நாடுகளுக்கு செல்லும் பஞ்சாபியர்களும், அதிகத் தொகையை தாயகத்திற்கு அனுப்பி வருகின்றனர். இவ்வாறு உலகில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு அனுப்பும் தொகை கடந்த 8 ஆண்டுகளில் 162 சதவீதம் உயர்ந்துள்ளதாக, உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டுவெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு 2,100கோடி டாலர் அனுப்பி இருந்தனர். இது, சென்ற 2010ம் ஆண்டு 5,500கோடி டாலராக (2 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.உலகில், இந்தியர்களைப்போல், எந்த ஒரு வெளிநாட்டவரும், தங்கள் தாயகத்திற்கு இந்த அளவிற்கு பணம் அனுப்பியதில்லை.எனவே, வெளிநாடுகளில் வசிக்கும் அயல்நாட்டவர், தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளதாக, உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 8 ஆண்டுகளில் (2009ம் ஆண்டு நீங்கலாக), வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2004ம் ஆண்டு, வெளிநாடு வாழ்இந்தியர்கள், இந்தியாவிற்கு அனுப்பிய தொகை, 1,875கோடி டாலராக இருந்தது. இது, 2005ம் ஆண்டு 2,212கோடி டாலராகவும், 2006ம் ஆண்டு 2,833கோடி டாலர் என்ற அளவிலும்அதிகரித்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு, வெளிநாடு வாழ் இந்தி யர்கள், தாயகத்திற்கு 3,721கோடி டாலர் அனுப்பியுள்ளனர். இது, 2008ம் ஆண்டு 4,994கோடி டாலராகவும், 2009ம் ஆண்டு 4,925கோடி டாலர் என்ற அளவிலும்உயர்ந்துள்ளது. 2008 ஆண்டு, உலக பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால், 2009ம் ஆண்டு இந்தியர்கள் அனுப்பிய தொகை சற்றே குறைந்தது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம், அவர்களின் குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரவளர்ச்சிக்கும் மறைமுகமாக உதவுகிறது. இந்தியாவில் ரியல் எஸ்டேட், கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், அயல் நாட்டு இந்தியர்களின் முதலீடு குவிந்து வருகிறது.அதனால், வெளிநாடுகளில் பணியாற்றி விட்டு, இந்தியா திரும்பு வோரின் உடமைகளை பாதுகாக்கவும், ஆதரவளிக்கவும்தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசி யம்.'இத்தகையோருக்கு வழி காட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டது தான், 'ரிடர்ன் டுஇந்தியா டாட் காம்' இணைய தளம்' என்கிறார் எனர்கேட்நிறுவன தலைமை செயல்அதிகாரி ரகு ராஜகோபால்.இந்த இணையதளம், அமெரிக்காவில் இருந்து திரும்புவோரின் உடைமைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்துசேர்ப்பது முதல், பணிவாய்ப்பு, குடியிருப்பு உள்ளிட்ட அனைத்துவசதிகள் வரை செய்து தருகிறது.இதனால், இந்தியா திரும்புவோர், எவ்வித சிரமமுன்றி தாயகத் தில் வாழலாம் என்கிறார் ரகு ராஜகோபால்.வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தாய்நாடு திரும்புவதாக கூறப்படுகிறது. அதே சமயம், இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 6 முதல் 8 லட்சம்பேர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.உலகளவில், சீனர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சீனா, ஹாங்காங்,தைவான் ஆகிய நாடுகளைச்சேர்ந்த 3கோடியே 50 லட்சம்பேர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அதனால், வெளிநாடு வாழ் அன்னியர் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கையில் ஹாங்காங்,தைவான் நாடுகளைசேர்க்கக் கூடாது என்று புள்ளியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அவ்வாறுசேர்த்தால், இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்த்து ஒன்றுபட்ட இந்தியாவாக கணக்கிடவேண்டும். இந்த கணக்கீட்டின் படி, அயல் நாடுகளில் வாழ்வோர் பட்டிய லில், இந்தியா முதலிடத்தை பெறும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாவது இடத்தில் சீனாகடந்த 2010ம் ஆண்டு, தாயகத்திற்கு அதிக தொகை அனுப்பியநாட்டவரில் சீனர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.வெளிநாடு வாழ்சீனர்கள், தங்கள் நாட்டிற்கு 5,100கோடி டாலர், அனுப்பி யுள்ளனர்.அடுத்த இடங்களில், மெக்சிகோ (2,260கோடி டாலர்),பிலிப்பைன்ஸ் (2,130கோடி டாலர்), பிரான்ஸ் (1,590 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன(நன்றி.தினமலர்)

வெள்ளி, 15 ஜூலை, 2011

வியப்பு

அற்புதம் உலகில் இது ஒன்று தான்

மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.

இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இptஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார். குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார், அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது.

கிணற்றின் அளவு

இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.
இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.
இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.

எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.

எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருதுகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருதுகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.

பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை(நன்றி.அன்போடு உங்களை...)

வியாழன், 14 ஜூலை, 2011

ஏரி

வீராணம் நீர்மட்டம் கோடையில் 'கிடுகிடு'

General India news in detail
சிதம்பரம் :

சென்னைக்கு தடையின்றி குடிநீர் அனுப்புவதற்காக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் விவசாயிகளின் உயிர் நாடியாக வீராணம் ஏரி உள்ளது. 2005ம் ஆண்டு முதல் சென்னை மக்களின் தாகத்தை தணிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுவதால், கோடை காலத்திலும் வீராணத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

கடந்த ஜனவரி மாத இறுதியில் ஒரு வாரம், கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் நிரப்பப்பட்டது. ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் 900 மில்லியன் கன அடி வரை தண்ணீர் நிரப்பப்பட்டது. வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருவதால், படிப்படியாக நீர்மட்டம் குறைந்தது. அதனால், கடந்த நான்கு நாட்களாக கீழணையில் இருந்து வடவாறு வழியாக கோடையிலும் இரண்டாவது முறையாக வீராணத்திற்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், வெகுவாகக் குறைந்திருந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது படிப்படியாக உயர்ந்து நேற்றைய நிலவரப்படி 750 மில்லியன் கன அடியைத் தொட்டது

வியாழன், 7 ஜூலை, 2011

அறிவுரை

பெற்றோர்களின் கவனத்திற்கு.....




மனவியலில் Superego Lacunae என்ற சொல் இருக்கிறது. இதற்கு தமிழில் அப்படியே பொருள் கூற முடிவது சுலபமல்ல என்றாலும் பொதுவாக ‘மனசாட்சியின் ஓட்டைகள்’ என்பதாகப் பொருள் கூறலாம். தங்கள் பிள்ளைகளின் தவறுகளையும், தவறான நடத்தைகளையும் கண்டும் காணாதது போல் இருக்கும் பெற்றோர்களின் நடவடிக்கையைச் சுட்டிக் காட்டுவதற்காக இச்சொல் அதிகம் மனோதத்துவ நிபுணர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இன்றைய பெற்றோர்களுக்கு ஏராளமான வேலைகள் இருக்கின்றன. ஒரு நாளுக்கு 24 மணி நேரம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. வீட்டுச் செலவை சமாளிக்க பெரும்பாலும் இரண்டு பேருமே வேலைக்குப் போக வேண்டியதாகக் கூட இருக்கிறது. இப்படி நேரம் போதாத அவசர வாழ்க்கையில் குழந்தைகளை அதிகம் கவனிக்க அவர்களால் முடிவதில்லை. அதனாலேயே அவர்கள் குழந்தைகளைக் கவனிக்கத் தவறுபவர்களாக இருக்கலாம். அதனை superego Lacunae வகையில் சேர்க்க முடியாது. ஆனால் அந்தக் கவனக்குறைவுகளுக்கு அவர்கள் தரும் விலை மிக அதிகம். உதாரணத்திற்கு இரண்டு உண்மை சம்பவங்களைப் பார்க்கலாம்.

ஒரு வீட்டில் தங்கள் ஒரே மகனுக்கு ‘பாக்கெட் மணி’ என்ற பெயரில் நிறைய பணம் தரும் பழக்கம் இருந்தது. அவன் கல்லூரிக்குச் சென்றதும் அளவுக்கும் அதிகமாகவே பெற்றோரிடம் பணத்தைக் கேட்டுப் பெற ஆரம்பித்தான். அந்தப் பணம் எப்படி செலவாகிறது என்பதை அறிய பெற்றோரில் ஒருவராவது மெனக்கெட்டிருந்தால் மகன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக ஆரம்பித்திருக்கிறான் என்பது சுலபமாகப் புரிந்திருக்கும். வேறு சில சின்னச் சின்ன வித்தியாசங்களும் அவன் நடவடிக்கைகளில் தெரிய ஆரம்பித்திருந்தன. பெற்றோர் அதைக் கவனித்தாலும் ’வயதுக் கோளாறு’ என்று அலட்சியமாக இருந்து விட்டனர். முடிவில் எல்லாம் கைவிட்டுப் போன பிறகு தான் ஒரு நாள் அவர்கள் அறிய நேர்ந்தது. இன்று அந்த இளைஞன் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறான். பெற்றோர் அவன் குணமாகி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டாத தெய்வமில்லை.

இன்னொரு குடும்பத்தில் ஒரு கல்லூரியில் படிக்கும் பெண் தனக்கு எந்த விதத்திலும் தகுதியில்லாத கீழ்த்தரமான ஒரு இளைஞனைக் காதலிக்க ஆரம்பித்திருந்தாள். கல்லூரியில் இருந்து வரும் வழக்கமான நேரத்திலிருந்து மிக காலந்தாழ்ந்து வருதல், வீட்டில் இருக்கும் சமயங்களிலும் எப்போதும் செல்போனில் மணிக்கணக்கில் பேசுதல், பெற்றோர் அருகில் வரும் போது குரலைத் தாழ்த்துதல் அல்லது செயற்கைத் தனமாக எதாவது பேசுதல் போன்ற நிகழ்வுகள் அந்த வீட்டில் நடக்க ஆரம்பித்தன. அந்த இளைஞனுடன் சுற்றுவதில் அவள் பரிட்சைக்குக் கூட செல்லவில்லை. போனில் அவள் தோழியுடன் பேசுகிறாள் என்று எண்ணி ‘இந்த காலத்தில் செல்ஃபோனில் நேரம் காலம் தெரியாமல் பேசுவதே வாடிக்கையாகப் போகி விட்டது’ என்று பெற்றோர் பொதுப்படையாக நினைத்து விட்டு விட்டனர். வர வேண்டிய நேரத்திற்கு வராமல் கால தாமதமாக வந்ததற்கு மகள் சொன்ன சாக்கு போக்குகளில் திருப்தி அடைந்து விட்டனர். அவர்கள் அலட்சியப்படுத்தாமல் கவனித்து காரணத்தைத் தேடி இருந்தால் கண்டிப்பாக உண்மை நிலவரம் தெரிந்திருக்கும். கடைசியில் ஒரு நாள் மாலையும் கழுத்துமாக வந்த பின் தான் அவர்கள் உண்மையை உணர்ந்தனர். காதல் திருமணத்தில் தப்பில்லை. ஆனால் ஆறே மாதத்தில் கணவனின் உண்மைக் குணங்கள் அறிந்து சகிக்க முடியாமல் மகள் தாய் வீட்டுக்குத் திரும்பி வந்த போது அவர்கள் துக்கம் சொல்லி மாளாது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் பெற்றோர் மாறுதல்களைக் காண ஆரம்பித்த போதே விழித்துக் கொண்டிருந்தால் இரண்டு பேருடைய வாழ்க்கையையும் மேலும் சீரழியாமல் திசை திருப்பி இருக்கலாம். இதில் அவர்கள் வேண்டுமென்றே கண்டும் காணாதிருந்தார்கள் என்று கூற முடியாது. போதிய கவனம் தராமல் இருந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

இனி superego Lacunae என்ற மனோதத்துவ கலைச் சொல்லிற்குப் பொருத்தமான வேறு இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.

அந்த வீட்டில் பெற்றோருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். ஒரே மகன் என்பதற்காக மகனைப் பெற்றோர் மிகச் செல்லமாக வளர்த்தனர். அவன் என்ன குறும்பு செய்தாலும் அவர்கள் அவனைத் திட்ட மாட்டார்கள். அவன் சகோதரிகளுடன் சண்டை போட்டு அவர்கள் அவனை அடித்து விட்டால் அந்தப் பெண்களுக்குத் தான் தண்டனை. பக்கத்து ஓட்டலில் அந்த மகனுக்குத் தனியாக ஒரு கணக்கு ஏற்படுத்தி அவன் எப்போது என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ள வசதி ஏற்படுத்தித் தந்தனர். அந்த சிறுமிகள் வீட்டில் பழைய சோறு சாப்பிடும் போது அந்த சிறுவன் அந்த ஓட்டலுக்குச் சென்று சுடச் சுட பிடித்ததைச் சாப்பிடுவான். சில சமயம் அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து வந்து சகோதரிகளுக்கு முன்பே அவர்களுக்குத் தராமல் அவன் அதை சாப்பிடுவதும் உண்டு. அந்த சிறுவன் வளர்ந்து பெரியவனான பின் சிறிதும் பொறுப்பில்லாமல் குடிகாரனாக மாறி அந்தப் பெற்றோர் சேர்த்து வைத்திருந்த சொத்தை எல்லாம் அழித்து உருப்படாமல் போனான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இன்னொரு குடும்பத்தில் தங்கள் ஒரே மகன் மீது அவனது பெற்றோருக்கு அளவு கடந்த பாசம் இருந்தது. அவன் மிக நன்றாகப் படித்து வகுப்பில் முதல் மாணவனாகவே என்றும் இருந்ததால் அவனைக் குறித்து அவர்களுக்கு அளவு கடந்த பெருமிதம். படிப்பில் சுட்டியாக இருந்த அவனிடம் சிறு வயதிலேயே தலைக்கனம் அதிகம் இருந்தது. அவன் தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களை எல்லாம் எடுத்தெறிந்து பேசுவான். அக்கம் பக்கத்தில் உள்ளோரிடமும் அப்படியே நடந்து கொண்டான். அப்போதெல்லாம் அந்தப் பெற்றோர் அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். யாராவது அந்தப் பெற்றோரிடம் அவன் நடத்தை குறித்து அதிருப்தி தெரிவித்தால் “நீங்கள் ஏன் அவனிடம் வம்புக்குப் போகிறீர்கள்?” என்று அவர்களிடமே திருப்பிக் கேட்பார்கள். பெரியவனான பிறகு அவன் பெற்றோரிடம் கூட அப்படியே நடந்து கொள்ள ஆரம்பித்தான். பெர்றோரின் வயதான காலத்தில் “பணம் ஏதாவது தேவைப்பட்டால் கேளுங்கள். கூடவே இருந்து என் உயிரை வாங்காதீர்கள்” என்று சொல்லி பெற்றோரை கூட வைத்துக் கொள்ள மறுத்து விட்டான்.

இந்த இரண்டு குடும்பத்திலும் அவர்கள் தங்கள் மகன்களின் குணாதிசயங்கள் தவறாகப் போகும் போதெல்லாம் கண்டும் காணாமல் இருந்தார்கள். வளரும் காலத்தில் கண்டு கொள்ளப்படாத தவறுகளை வளர்ந்த பின்னர் திருத்துவது சுலபமல்ல. எதையெல்லாம் குழந்தைகளிடத்தில் விதைக்கிறோமோ அதையெல்லாம் வயதான காலத்தில் அறுவடை செய்ய வேண்டி வரும் என்பதை பெற்றோர்கள் மறந்து விடக்கூடாது. களைகள் காணப்பட்டால் சிறு வயதிலேயே பிடுங்கி எறிவது தான் முறை. அது தான் சுலபம். கண்டும் காணாமலும் போனால் அறுவடைக் காலம் அழ வேண்டிய காலமாக மாறி விடும் என்பது உறுதி.

முதல் இரண்டு உதாரணங்களில் பெற்றோர் போதுமான கவனம் செலுத்தாமல் விட்டு விட்டனர். கடைசி இரண்டு உதாரணங்களில் பிள்ளைகள் செய்வதெல்லாம் அழகு என்று பெற்றோர் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தொட்டால் தீயின் குணம் சுடுவது தான்.

எனவே பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் வளரும் போது நற்குணங்களுடன் வளர்கின்றனரா, புத்திசாலித்தனமாக வளர்கின்றனரா என்பதை கண்காணிக்க மறந்து விடாதீர்கள். சிறு சிறு தவறுகள் கண்டால் அவ்வப்போது திருத்துங்கள். அப்போது சின்னவர்கள் தானே என்று சகித்துக் கொள்ள நினைக்காதீர்கள். சிறு வயதில் அவர்களுடைய பண்புகள் நல்லதாக இருந்து ஆழப்பட்டால் மட்டுமே அவர்கள் வளர்ந்த பின்னால் உங்களுக்குப் பெருமை சேர்க்கிற விதத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த மதிப்பீடுகளை அவர்களுடைய சிறு வயதில் சொல்லித் தருகிறீர்களோ அந்த மதிப்பீடுகளின் படியே அவர்கள் மற்றவர்களிடம் மட்டுமல்ல உங்களிடமும் நடந்து கொள்வார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்குமானால் அந்த மதிப்பீடுகளின் தரம் உயர்ந்ததாக இருக்கும்படியே நீங்கள் கண்டிப்பாக பார்த்துக் கொள்வீர்கள்.

வெள்ளி, 1 ஜூலை, 2011

சனி, 18 ஜூன், 2011

புற்றுநோயை விரட்டும் காபி


எனக்குச் சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. காபி இல்லாமல் இருக்க முடியாது என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவரா நீங்கள்? நீங்கள் பெருமைப்படுவதற்கு கூடுதலாக இன்னொரு விஷயம் இப்போது கிடைத்துவிட்டது. காபி குடிப்பது மார்பகப் புற்றுநோய் வருவதைக் குறைத்துவிடுகிறதாம். ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரே வயதிலுள்ள பெண்களை வைத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இது தெரிய வந்திருக்கிறது. காபி குடித்த பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவும், காபி அருந்தாத பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் அதிகம் இருப்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள் அவர்கள். ஆனால் காபி குடிப்பது, எந்தவிதத்தில் பெண்களின் உடலில் செயல்பட்டு புற்றுநோய் வருவதைக் குறைக்கிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. நீங்கள் காபி பிரியரா? இனிமேல் காலையில் எழுந்ததும் கண்களைத் திறக்காமலேயே காபியை ரசித்து அருந்தலாம்!

புதன், 25 மே, 2011

அழுகை

கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது

உலகம் முழுவதும் பெண்களுக்கு தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஆம். பெண்கள் அழுவதற்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது ஆண்களே.

லண்டனில் கண் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் சார்பில் 2,000 ஆண், பெண்களிடம் (அழுகை வரும் அளவுக்கு) ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தங்களை அழ விடுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக 4ல் 1 பெண் தெரிவித்தார். அதிலும், ஒருவர்கூட தனது அப்பா, மகனை காரணமாக கூறவில்லை! ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களின் ஏகோபித்த குற்றச்சாட்டு… கணவன் அல்லது காதலன் மீதுதான். மனைவியோ, காதலியோ… அழ விட்டுப் பார்ப்பதில் ஆணுக்கு தனி ஆர்வம் இருப்பதாக வெடித்தனர் பெண்கள்.

ஆய்வின்படி, மனைவி, காதலி மட்டுமின்றி தாயைக் கூட அழவிடும் ஆண்கள் 63 சதவீதம் என்று தெரிய வந்தது. இப்படிச் செய்யும் ஆண்கள் தப்பி விட முடியுமா என்ன…? அவர்கள் ஆபீசில் பாஸ் கடிக்கும்போதும், வேலையைச் சுமத்தும்போதும் அழுகின்றனராம். இங்கிலாந்து பெண்களில் 32 சதவீதத்தினரும், ஆண்கள் 22 சதவீதத்தினரும் வேலையில் மனஅழுத்தம், பிரச்னையால் கண்ணீர் விட்டுக் கதறுகின்றனர்.

கடந்த 6 மாதங்களில் ஒருமுறையாவது அழுததாக ஆய்வில் பங்கேற்ற பலர் தெரிவித்தனர். எனினும், அலுவலக பிரச்னைகள், டென்ஷனால் கண்ணீர் விட்டு அழும் ஆண்கள் குறைவே. மற்றபடி மனதுக்குள் அழுதாலும், பெண்களால் என்ன பிரச்னை வந்தாலும் மனதுக்குள் கூட அழுவதில்லை. ஸ்டிராங்காக எதிர்கொள்கின்றனர். மாறாக, பெண்களை டென்ஷனாக்கி அழ விடுகின்றனர் என்கிறார் ஆய்வு நடத்திய டாக்டர் சாரா ப்ரூவர்.

அழுவது சோகமானதுதான் என்றாலும், கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது என்கிறார் அவர்.நவீன உலகில் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன் கழிக்கிறோம். அதனால், கண்கள் காய்ந்து ஈரத்தன்மையை இழக்கின்றன. கண்ணீர் வெளியானால் கண்கள் சுத்தமாகும் என்றார் சாரா.

சாரே… பொஞ்சாதி, கேர்ள் பிரண்ட அழ விடுறதே அவங்க கண்கள் நல்லா இருக்கணுங்கற நல்ல நோக்கத்துலதான்னு அவங்க புரிஞ்சிக்கணும் தானே சாரே… என்கிறார் தினமும் மனைவியை அழ விடும் ஒரு கணவர்

சனி, 14 மே, 2011

பணத்திற்கு பட்டை நாமம் போட்ட வாக்காளர்கள்

election 2011  பணத்துக்கு பட்டை நாமம் போட்ட வாக்காளர்கள்
A+ A-
தேர்தல் கமிஷனின் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளையும் மீறி, தமிழகத்தில் பண பட்டுவாடா நடந்தாலும், அதையும் வாங்கி, பணத்துக்கு, "பட்டை நாமம்' போட்டுவிட்டு, தாங்கள் நினைத்தவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போட்டு, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் என்றால், கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி இறைப்பது வாடிக்கையாகி விட்டது. ஜனநாயகத்தை, பணநாயகத்தால் வெல்ல முடியும் என்பது, திருமங்கலம் இடைத்தேர்தலின் போது, தி.மு.க.,வால், உறுதிபடுத்தப்பட்டது. அந்த தேர்தலில், தி.மு.க., கோடி கோடியாக பணத்தைக் கொட்டியது. இதற்கு நல்ல பலன் கிடைத்ததால், அதைத் தொடர்ந்து நடந்த, மதுரை மேற்கு, மதுரை மத்திய தொகுதிகளில், இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது. அதன் மூலம், தி.மு.க., அடுத்தடுத்து வெற்றிகளையும் ஈட்டியது.சட்டசபை தேர்தலிலும், இந்த நடைமுறையை பின்பற்ற முயற்சிகள் நடந்தன. ஆனால், தேர்தல் கமிஷன் இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. எப்போதும் இல்லாத வகையில், தேர்தல் செலவு கணக்குகளை பார்வையிட, மத்திய கலால் துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளின் கீழ் பறக்கும் படை, வீடியோ குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழு, சுற்றிச் சுற்றி வந்ததன் மூலம், பண பட்டுவாடா ஓரளவு கட்டுக்குள் வந்தது.

இந்த கிடுக்கிப்பிடிகளை எல்லாம் மீறி, தமிழகம் முழுவதும், பல வழிகளில், தி.மு.க., தாராளமாக பணத்தை செலவு செய்தது. ஒரு தொகுதிக்கு, கட்சி சார்பில் மூன்று கோடி ரூபாயும், வேட்பாளர்கள் சார்பில் பல கோடி ரூபாய் என, பட்டுவாடாவும் நடந்தது."அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தையா தருகின்றனர்... நம்மிடமிருந்து எடுத்த பணத்தைத் தானே திருப்பித் தருகின்றனர்...' என்ற எண்ணத்தை, பல அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் மக்கள் மனதில் விதைத்ததால், வேட்பாளர் கொடுத்த பணத்தை மறுக்காமல் வாங்கிக் கொண்ட மக்கள், பணத்துக்கு, "பட்டை நாமம்' போட்டுவிட்டு, தங்களின் விருப்பப்படியே ஓட்டுப் போட்டதன் மூலம், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஜனநாயகத்தை பணநாயகத்தால் ஜெயிக்க முடியும் என்ற எண்ணம், இந்த தேர்தல் மூலம் தவிடுபொடியாக்கப் பட்டுள்ளது.

திங்கள், 18 ஏப்ரல், 2011

காத்திருக்கும் கடமைகள்

ஓருவழியாகத் தேர்தல் திருவிழா ஓய்ந்துவிட்டது. பலருக்குக் கிலியும், சிலருக்கு வலியும் இத்தேர்தல் ஏற்படுத்தியது என்றால் அதில் வியப்பில்லை. எனவே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பது மட்டுமே அடுத்த கட்ட எதிர்பார்ப்பு. இதுவரை எப்படி நடந்ததோ அது இம்முறை மாறிவிட்டது என கூறும் அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இருந்தது. நினைத்ததை முழுவதுமாக சாதிக்கமுடியாவிட்டாலும், இனி வரும் தேர்தலில் இந்த பயம் நிச்சயம் இருக்கும். அதுவரை ஜனநாயகத்துக்கு வெற்றி என்றே கருதலாம்.அதைச் செய்வேன், இதைச் செய்வேன் எனக் கூறியவர்கள் அதிகாரத்துக்கு வந்ததும் முதலில் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும் என்பதுதான் அடுத்தகேள்வி. இப்போதைய எதிர்பார்ப்பு புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அரசு பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்குக் காத்திருக்கும் கடமைகள் ஏராளம்.ஏழைகளின் பிரச்னைகளை முதலில் தீர்க்க வேண்டும். மாறாக தனிமனித வெறுப்புகள், பழிவாங்கல்கள் இருக்கக் கூடாது.கடந்தமுறை செயல்படுத்தாமல் நிறுத்தப்பட்டவை அல்லது புதிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதவிர, மக்கள் எதிர்பார்க்கும் பல்வேறு பிரச்னைகளை புதிய அரசு தீர்க்க வேண்டியது மிக அவசியம்.இப்போதைய தலையாய பிரச்னையாக இருப்பது மின்வெட்டு. இதைத் தவிர்ப்பதற்கு உடனடியாகச் செய்ய வேண்டியவை அதிக அளவில் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம். மேலும் தனியார் உதவியுடன் அனல் மின்நிலையங்களை ஆங்காங்கே அமைத்து சிறிய அளவில் உற்பத்தி செய்வது.பெரும்பாலான கிராமங்களைத் தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் தத்தெடுத்து மின்தடையே இல்லாமல் செய்ய மாநில அரசு அதிக உதவி அளிக்கலாம்.அடுத்ததாக, தலைக்குமேல் தொங்கும் கத்தியாக இருப்பது பள்ளி, கல்லூரி கல்விக் கட்டண விவகாரம். தனியார் பள்ளிகளின் பகல் கொள்ளையைத் தடுக்க உடனடியாகச் சட்டம் இயற்றி மாநில அரசு நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அனைத்துக் கல்வி நிறுவனங்களின் கட்டண விவரங்களைக் கண்காணிக்க வேண்டும்.வேலைவாய்ப்பகங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பத் தக்க நடவடிக்கை தேவை. தேர்தலின்போது பல கிராமங்களில் வேட்பாளர்களுக்குப் பெரிதும் தலைவலியாக இருந்தது சாலை, குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதிகள் இல்லாததுதான். எனவே, இந்த அடிப்படை வசதிகளை மேற்கொள்ள விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரேஷனில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டாலும் அதில் முறைகேடுகள் பெருமளவில் காணப்படுகின்றன. அதைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொருள்கள் வழங்க பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் கிடையாது. அவர்களை நியமிப்பதன் மூலம் இதுபோன்ற தவறுகள் களையப்படலாம்.தமிழகத்தின் பல பகுதிகளில் ஆறுகளிலிருந்து மணல் கடத்தப்படுவதும், கனிம வளங்கள் கடத்தப்படுவதும் இன்னும் முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. அதைத் தடுத்து இயற்கை வளத்தைக் காப்பாற்ற வேண்டும்.விவசாயிகளுக்கு உரிய நிவாரணம், மானிய உதவி, வேளாண்மை உற்பத்திக்குப் புதிய யுக்திகள், கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு நியாயமான கொள்முதல் விலை, வெங்காயம், மஞ்சள், பூண்டு போன்ற வேளாண் பொருள்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க விவசாயிகளுக்கு தகுந்த ஊக்கமும், உதவியும் அளிக்க வேண்டியது கட்டாயம்.ரவுடிகள் தொல்லை, கட்டப்பஞ்சாயத்து, கொலை, ஆள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடக்காமல் சட்டத்தைக் கடுமையாக்கலாம். அரசியல் தலையீடு இல்லாமல் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும் வகையில் பாரபட்சமில்லாத ஆட்சி அமைந்தால் மக்கள் நம்பிக்கை வீண் போகாது

திங்கள், 11 ஏப்ரல், 2011

ஓட்டு போடுங்க

யோசித்து வாக்களித்தால் நன்று'



கண்ணியமான தேர்தல் - 2011 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆம்பூர் ஜமாத்தே இஸ்லாமி இந்த் அமைப்பு தினந்தோறும் வாக்காளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறது. சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ள எஸ்எம்எஸ்-ல் கூறப்பட்டுள்ளதாவது: தன் சீட்டுக்கு பணம் கொடுத்தார் - அன்று. நம் ஓட்டுக்கு பணம் கொடுத்தார் - இன்று. நாளை நம் நாட்டுக்கு எதை கொடுப்பார் என்று நாம் யோசித்து வாக்களித்தால் நன்று. ஜனநாயகம் காப்போம், பண நாயகம் ஒழிப்போம். கடமையை செய்வோம் கண்ணியம் காப்போம்