திங்கள், 19 ஜூலை, 2010

பெருமை

தமிழக இளைஞர் உதய குமார் கைவண்ணத்தில் இந்திய ரூபாய்க் குறியீடு!

ஜூலை 15, 2010 :௦ தமிழக இளைஞர் உதய குமார் கைவணத்தில் உருவாகியிருக்கிறது, இந்திய ரூபாய்க் குறியீடு! இந்திய ரூபாய்க்கான புதிய அடையாளக் குறியீட்டை, மத்திய அமைச்சரவை இன்று இறுதி செய்து ஒப்புதல் அளித்தது.

நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய ரூபாய்க்கு குறியீடு வடிவமைக்க போட்டி அறிவிக்கப்பட்டது. குறியீட்டை வரைந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் இருந்து அரசுக்கு விண்ணப்பங்கள் வந்தன.

அதில் இருந்து தேர்ந்தெடுத்து, இறுதி செய்யப்பட்டுள்ள இந்திய ரூபாய்க் குறியீட்டை வடிவமைத்தவர், தமிழகத்தைச் சேர்ந்த டி.உதய குமார் (வயது 32). அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, அவருக்கு ரூ.2.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

( இந்திய ரூபாய்க் குறியீடு குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள... இந்திய ரூபாய்க்கு புதிய அடையாளக் குறியீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல் )

சென்னையில் பிறந்து வளர்ந்த உதய குமார், அண்ணாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஆர்க்கிடெக் படித்தவர். பின்னர், மும்பை ஐ.ஐ.டி.யில் டிஸைனிங்கில் பி.எச்டி பயில்பவர். தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.

"நான் வடிவமைத்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.

நீண்ட நாட்கள் சிந்தித்து, இந்த குறியீட்டை உருவாக்கினேன். தேவனகிரி எழுத்துருவில் இருந்து 'ரா' (Ra)-வை எடுத்து, அதில் நமது தேசியக் கொடியைக் கலந்தேன். குறியீட்டின் மேல்பகுதியில் இந்தியத் தன்மை மிகுந்திருக்கும். பிறகு, ரோமன் எழுத்தான ஆர் (R)-ஐயும் இணைத்தேன், அதன்மூலம் சர்வதேசத் தன்மை கிடைக்கும் என்பதற்காக," என்று கூறியிருக்கிறார் உதய குமார்.

இந்திய ரூபாய்க்கு குறியீடு தந்துள்ள உதய் குமாருக்கு தனது விருப்பப்படியே ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. அவருக்கு, கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

உதய குமார் அனுப்பிய குறியீடு, தெரிவுப் பட்டியலில் முதல் 5 இடத்தைப் பிடித்தவுடன், டெல்லியில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அதையடுத்து, நேரில் தான் வடிமைத்த குறியீடு தொடர்பான விளக்கத்தை அளித்திருக்கிறார். தனது குறியீட்டில் இந்திய பாரம்பரியத்தையும், சர்வதேசத் தன்மையையும் இரண்டறக் கலந்ததே உதய குமாருக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது

திங்கள், 12 ஜூலை, 2010

பாவமன்னிப்பு

தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஃமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ .

இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

புகாரி: ஹதீஸ் எண்: 6306 m.z.சல்மான்பாரிஸ் எனக்குஅனுப்பியஇமெயில்தொகுப்பு....

வெள்ளி, 9 ஜூலை, 2010

தொழுகை

தொழுகை



அப்துல் அஜீஸ் என்பவர் எகிப்தின் ஆளுநராக இருந்தார். இவருடைய அன்பு மகனின் பெயர் உமர். (இவர்தாம் பின்னாளில் ‘உமர் இப்னு அப்துல் அஜீஸ்’ என்று புகழ்பெற்ற ஆட்சியாளராக இஸ்லாமிய வரலாற்றில் ஜொலித்தார்) தம்முடைய மகன் உமரை உயர்கல்விக்காக மதீனா அனுப்பி வைத்தார் அப்துல் அஜீஸ்.

மதீனா மாநகரில் அச்சமயத்தில் ஸாலிஹ் பின் கைஸான் எனும் புகழ்பெற்ற மாமேதை வாழ்ந்து வந்தார். அவரிடம் தம் மகனை அழைத்துச் சென்று, ‘‘ஆசிரியர் அவர்களே, இவன் என் மகன் உமர். இவனை உங்கள் பொறுப்பில் விடுகிறேன். மார்க்க அறிவிலும், ஒழுக்கத்திலும், கல்வி கேள்விகளிலும் இவனைச் சான்றோன் ஆக்குவது உங்கள் கடமை’’ என்று பணிவுடன் கூறித் தம் மகனை அந்த மாமேதையிடம் ஒப்படைத்தார்.

கல்வி போதனையும் நல்லொழுக்கப் பயிற்சியும் நாள்தோறும் நடைபெற்று வந்தன. ஒருமுறை மாணவர் உமர் தொழுகைக்குச் சற்று தாமதமாக வந்தார். ஆசிரியர் இறையச்சமும் கண்டிப்பும் மிகுந்தவர். எனவே உமரை அழைத்து, ‘‘நீ இன்று தொழுகைக்குத் தாமதமாக வந்ததற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டார்.

‘‘முடியலங்காரம் செய்து கொண்டிருந்தேன்; அதனால் சற்றுத் தாமதம் ஆகிவிட்டது’’ என்றார் உமர்.
‘‘ஓஹோ, தொழுகைக்குத் தாமதமாக வரும் அளவுக்கு முடியலங்காரம் முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ?’’ என்று கடிந்துகொண்ட ஆசிரியர், ‘இனி இவ்வாறு தாமதமாக வரக்கூடாது’ என்று எச்சரித்து மாணவரை மன்னித்து அனுப்பிவிட்டார்.

இந்தச் செய்தி எகிப்தின் ஆளுநரான தந்தை அப்துல் அஜீஸுக்கு எட்டியது. உடனே தம் ஆஸ்தான நாவிதரை அழைத்தார். ‘‘நீங்கள் இப்பொழுதே மதீனாவுக்குச் செல்லுங்கள். அங்கு என் மகன் உமர் படித்துக் கொண்டிருக்கிறான். முதல் வேலையாக அவன் தலையை மொட்டையடித்துவிட்டு வாருங்கள்’’ என்று ஆணையிட்டு அனுப்பி வைத்தார்.

நாவிதரும் மதீனா சென்று அவ்வாறே செய்தார். உமையாக்கள் என்று வரலாறு குறிப்பிடும் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்தான் இளவரசர் உமர். ஆயினும் தொழுகைக்குத் தாமதமாக வருவதை அவருடைய தந்தை விரும்பவில்லை.

அந்த அளவுக்குக் கண்டிப்புடனும் கண்காணிப்புடனும் வளர்க்கப்பட்டதால்தான் பின்னாளில் ‘உமர் இப்னு அப்துல் அஜீஸ்’ எனும் மாபெரும் ஆட்சியாளராய் இவர் புகழ்பெற முடிந்தது.

இந்த வாரப் பிரார்த்தனை

‘இறைவா! நான் உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், பரிசுத்த தன்மையையும், போதுமென்ற மனத்தையும் கோருகிறேன்

வியாழன், 1 ஜூலை, 2010

ரஜப் மாதம்

ரஜப் மாத நற்(?) செயல்கள் !

ரஜப் மாதம் என்பது ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். அது, அல்லாஹ்வினால் தனிப்பட்ட முறையில் சிறப்பித்து, தனி அந்தஸ்து பெற்ற மாதங்களில் ஒன்றாகும். அல்லாஹ் திருக்குர்ஆனின் 9ஆவது அத்தியாயமாகிய 'தவ்பா'வின் 36ஆவது வசனத்தில் கூறுகின்றான்:

"திண்ணமாக அல்லாஹ்வின் அங்கீகாரம் பெற்ற மாதங்களின் எண்ணிக்கை (ஓராண்டுக்குப்) பன்னிரண்டுதாம். (இவ்வாறே) வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே அல்லாஹ்வின் (பதிவுப்) புத்தகத்தில் (பதிவு செய்யப் பட்டு) உள்ளது. அவற்றுள் நான்கு (மாதங்கள்) புனிதமானவையாகும். இதுவே நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் ..."

அல்லாஹ் இந்த நான்கு புனித மாதங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதில் பாவங்களும் தீமைகளும் ஏற்படாவண்ணம் தவிர்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டுள்ளான்.

"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களையும் சிறப்பான மாதங்களையும் ... (அவமதிப்பதை) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள் ..." (5:2).

அதாவது, பாவமான காரியங்களைத் தவிர்ப்பதையும் அல்லாஹ் சிறப்பித்தவற்றுக்கு மாசு கற்பிப்பதையும் தடை செய்வதன் மூலம் இந்தப் புனித மாதங்களைக் கண்ணியப் படுத்திடுமாறு அல்லாஹ் நமக்கு ஏவியுள்ளான். இந்தத் தடையும் கட்டளையும் பாவமான காரியங்களில் கவனமாக இருப்பது போல் தவறான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த செயல்பாடுகளை விலக்குவதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கியுள்ளது. ஆனால் நம்மில் பலர் கண்ணியமான இந்த ரஜப் மாதத்தின் பெயரால் விசேஷமான நோன்புகள், 27ஆம் நாளன்று விசேஷமான தொழுகைகள், (கப்ருஸ்தான்) அடக்கஸ்தலத்தை தரிசித்து அங்கு விசேஷ துஆக்கள் ஓதுதல், இம்மாதத்தில் சிறப்புள்ளது என்று கருதி விசேஷமாக உம்ராக்கள் செய்தல் போன்ற நபிவழி(ஸுன்னத்து)க்கு மாற்றமான பல்வேறு நூதன அனுஷ்டானங்களை நன்மை பெற்றுத் தரும் காரியமாக கருதி, இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் இம்மாதத்தில் நிறைவேற்றுவதைப் பரவலாகக் காணமுடிகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தில் இது போன்ற நபிவழியில் இல்லாத, குர்ஆனுக்கும் நபிவழி(ஸுன்னத்து)க்கும் மாற்றமான புதுமையான காரியங்களைச் செயல்படுத்துவது மிகவும் தீங்கான ஒன்றாகும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் மார்க்கம் முழுமை படுத்தப்பட்ட பின்னரே மரணித்தனர்.

"... இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்" (5:3).

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"எவர் ஒருவர் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குகிறாரோ அது அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது" (முஸ்லிம் 3242).

ரஜப் எனும் இம்மாதத்தில் பல 'பித்அத்' எனும் நூதனமான அனுஷ்டானங்கள் ( மற்றும் நம்பிக்கைகள் )நன்மை தரும் எனும் பெயரால் நடைமுறையில் உள்ளன அவற்றில் சில.

1) ஸலாத்துல் ரகாஇப் எனும் நூதனத் தொழுகை

இது சிறப்பான நூற்றாண்டுகளான ஆரம்பகால நூற்றாண்டிற்குப் பிறகு குறிப்பாக ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில பொய்யர்கள் இதை ரஜபுப் பிறை ஒன்றில் தொழ வேண்டும் என்று அறிமுகப்படுதினார்கள்.

ஹதீஸ்கலை வல்லுனர்கள் பெரும்பாலும் இதை பித்அத் என்று நிராகரித்துள்ளனர். இமாம் அபு ஹனீஃபா, ஷேக் இப்னு தைமிய்யா, இமாம் மாலிக், இமாம் ஷாஃபீ, இமாம் அஃத்ஃதவ்ரீ போன்ற பலரும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.

2) இம்மாதத்தின் முக்கியமான சம்பவங்களாகக் கூறப்படுபவை

இம்மாதப் பிறை ஒன்றில்தான் நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் பிறந்தார்கள்; 27 அல்லது 25ஆம் நாளன்று அவர்களுக்குத் தூதுத்துவம் வழங்கப்பட்டது போன்ற அனைத்துமே தவறான, ஆதாரமற்ற கூற்றுகளாகும்.

3) ஷப்-ஏ-மிஃராஜ்

நபி(ஸல்) அவர்களின் மிராஃஜ் எனும் விண்ணுலகப் பயணத்தை ஷப்-ஏ-மிஃராஜ் எனும் பெயரில் கொண்டாடுவது. ரஜப் மாததின் 27ஆம் நாளில் மிஃராஜ் நடைபெற்றதாக உள்ள ஒரு பலவீனமான செய்தியின் அடிப்படையில், முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் நமக்குத் தரும் படிப்பினைகள் யாவை என்பதைக் கருத்தில் கொள்ளாமல் மிஃராஜ் இம்மாதத்தில் நடந்ததாகக் கருதி அதைச் சிறப்பாகக் கொண்டாடுதல்.

இந்நாளைச் சிறப்பிக்கும் முகமாக இந்நாளில் விசேஷ நோன்பு நோற்பது, இரவு முழுவதும் விசேஷத் தொழுகைகள் தொழுவது, அதிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் 100 முறை ஆயத்துல் குர்ஸி, 100 முறை குல் ஹுவல்லாஹு போன்ற சூராக்கள் ஓதி தொழ வேண்டும் போன்ற நபிவழி ஆதாரமற்ற அமல்களைப் பலர் செய்கின்றனர். இது மிகப் பெரும் வழிகேடு ஆகும். புதிய வகைத் தொழுகைகளைப் புகுத்துவது, நபி (ஸல்) அவர்கள் நமக்கு நன்மையைப் பெறும் செயலை, அதாவது மார்க்கத்தை முழுமையாகக் காட்டித் தரவில்லை என்று கூறுவதற்குச் சமமாகும்.

இன்னும் சிலர் அவர்கள் மிஃராஜ் என்று நம்புகின்ற நாளை இஸ்லாமிய விழாக்களில் ஒன்றாகவே கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது. அதிலும் ஆண்-பெண்கள் கலந்து பெண்கள் ஹிஜாபின்றி வெளியில் செல்வது, ஹராமான முறையில் பாடல்கள் பாடுவது, கலந்துரையாடுவது போன்ற இதர தடுக்கப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது. இது இஸ்லாம் அனுமதித்துள்ள இரு பெருநாட்களிலும் அனுமதிக்க படாத ஒன்று எனும்போது இதுபோன்ற பித்அத்தான விழாக்களின் நிலை என்ன என்பதை விளக்கத் தேவை இல்லை. இவை அனைத்தும் மிஃராஜ் எனும் பயணம் நடந்ததாகக் கூறப்படும் ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.

மிஃராஜ் எனும் பயணம் இன்ன நாளில்தான் நடந்தது என்று ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் ஏதுமில்லை. எனில், இவ்வாறு மனம்போனபடிக் கொண்டாட நமக்கு எவ்வித அனுமதியுமில்லை. ஏனெனில் நபி(ஸல்) அவர்களோ அவர்களுடைய அருமைத் தோழர்களான ஸஹாபாக்களோ இவ்வாறு நமக்குக் காட்டித்தந்ததாகவோ செய்ததாகவோ எந்த ஆதாரமுமில்லை.

4) பல்வேறு ஆதாரமற்ற துஆக்களை ஓதுவது

ரஜப் மாதத்தில் ஓதவேண்டியவை என்ற பெயரில் பல்வேறு துஆக்களை சிலர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தும் நபி வழி ஆதாரமற்ற பித்அத்துகளாகும்.

5) கப்ருகளுக்கு செல்வது

இம்மாதத்தில் மட்டும் விசேஷமாகக் கப்ருக்களுக்குச் சென்று சில துஆக்கள் ஓதுவதும் பித்அத் ஆகும். பொதுவாக எல்லா நாட்களிலும் கப்ருகளுக்கு(பொது மையவாடிக்கு)ச் சென்று அங்குள்ளவர்களுக்காகப் பிராத்தனை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட ஒன்றே. மேலும் "கப்ருகளுக்குச் செல்வது மரணத்தின் சிந்தனையை ஏற்படுத்தும் ஆகையால் கப்ருகளுக்கு செல்லுங்கள்" (திர்மிதீ 974) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அதை ரஜப் மாதத்தில் மட்டும் செய்வது நபி வழியல்ல.

6) கோன்டே கி நியாஜ்

இந்தப் பெயராலும், இன்னும் சில இடங்களில் பூரியான் ஃபாத்திஹா எனும் பெயராலும் விசேஷ பாத்திஹாக்கள் ஓதி விருந்துகள் என்றும் புனிதமானதாகக் கருதி இனிப்புகளும் உணவும் பரிமாறுவது, அது நன்மை என்று கருதுவது, அதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விநியோகிப்பது ஆகிய அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டிய பித்அத்கள் ஆகும்.

7) ரஜப் மாத நோன்பு

இந்த மாதத்திற்கு என்று விசேஷ நோன்பு நோற்க குர்ஆனிலோ நபிவழியிலோ எந்த ஆதாரமுமில்லை. ஆகையால் வழமையாக நோன்பு நோற்பது என்பது வேறு; இம்மாதத்தின் சிறப்பு நோன்பு என்று கருதி இம்மாதத்தில் நோற்பது என்பது வேறு என்பதையும் உணர வேண்டும்.

8) விசேஷ உம்ராக்கள்

உம்ரா பயணம் மேற்கொள்வது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. ஆயினும் அதை இம்மாத்தில் செய்வது அதிக நன்மையானது என்று கருதுவது அல்லது இம்மாதத்தில் அதிகமான எண்ணிக்கையில் உம்ரா மேற்கொள்வது ஆதாரமற்ற செயலாகும்.

மேற்கண்டதைப் போன்ற ஒவ்வொரு பித்அத்தான காரியமும் வழிகேடு ஆகும் என்பதை உணர்ந்து நபிவழிக்கு மாற்றமான நம்பிக்கைகளையும் அமல்களையும் செய்வதைக் கைவிட வேண்டும். இல்லையெனில் "பித்அத்துகள் நரகில் சேர்க்கும்" (திர்மிதீ 1560) என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி விட்டு நாமாகவே நரகிற்குச் செல்ல முயல்வதைப் போன்றதாகும்.

ஆகையால் ரஜபு மாத நூதன வழிபாடுகளையும் நடைமுறைகளையும் களைந்து, நபி வழியில் நடந்து, இம்மை மறுமை வெற்றியும் ஈடேற்றமும் பெற முறையாக முயல்வோமாக; அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

நன்றி : சத்தியமார்க்கம்.காம்